தமிழுக்கு தனி கண்காட்சி!

By செய்திப்பிரிவு

மெட்ரிக். பள்ளிகளில் தமிழ் பாடவேளை களைத் தவிர, தமிழ் கற்க மாணவர் களுக்கு வாய்ப்பு குறைவாக உள்ள சூழலில், தமிழுக்கென்றே பிரத்தியேகமாக 2 நாட்கள் கண்காட்சியை நடத்தியுள்ளது கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

பாரதியார், வள்ளுவர், ஔவையார், கண்ணகி வேடமணிந்த மாணவ, மாணவிகள் கண்காட்சிக்கு வந்தவர்களை வரவேற்றது புதுமையாக இருந்தது. மொழித்திறன் வளர்க்க சொல் விளையாட்டுகள், தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் பட விளக்கங்கள், வரலாற்று தலங்களின் மாதிரிகள், கைவினைப்பொருட்கள் என 466 பொருட்களை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதுதவிர, பழங்கால நாணயங்கள், அதற்குரிய விளக்கம், பலவகைப் பூக்கள், அவற்றின் தமிழ்ப் பெயர்கள், தமிழ்ப் புலவர்கள், கடல் பொருட்கள், பண்டைய தமிழ் எழுத்துகள், அவற்றின் உருமாற்றம் என ஏராளமானவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தனர். கலிங்கத்துப்பரணியில் வரும் போர்க்கள காட்சி, கடையேழு வள்ளல்களின் சிறப்புகளை 9-ம் வகுப்பு மாணவி ஈவ்லின் தத்ரூப
மாக காட்சிப்படுத்தியிருந்ததுடன், போர்க் குறிப்பு களையும் எளிமையான தமிழில் விளக்கமளித்து ஆச்சரியப்படுத்தினார்.
கார்ட்டூன்கள், வீடியோகேம்களுக்கு மாணவர்கள் அடிமையாகிவரும் சூழலில், பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, கோலிகுண்டு, பம்பரம், தாயம் உள்ளிட்ட வற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தி யிருந்தனர். பல்லாங் குழியை காட்சிப்படுத்தியிருந்த 5-ம் வகுப்பு மாணவி திக்ஷாவிடம் பேசியபோது, “விடுமுறை நாட்கள்ல அதிகமா செல்போனோ, டீவியோ பார்க்க மாட்டேன். பாட்டிதான் பல்லாங் குழி ஆடுறதை சொல்லிக் கொடுத் தாங்க. என்னோட படிக்கற நண்பர்களுக்கும் இப்போது அதை சொல்லிக்
கொடுக்கறேன்” என்றார்.

கம்பங்கூழ், ராகிகூழ், புட்டு, சோளச்சோறு என பல்வகை பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தியதுடன், அவற்றின்
முக்கியத்துவத்தையும் பார்வை யாளர்களுக்கு விளக்கி அசத்தினர் மாணவர்கள். மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வந்தபிறகு, ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றை இன்றைய குழந்தை கள் கண்டிருப்பதே அரிது. ஆனால், கண்காட்சியில் களிமண், செம்மண்ணைக் கொண்டு ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் போன்றவற்றை செய்துவைத்திருந்தது வியப்பை உண்டாக்கியது.
அதேபோல, சொல் விளையாட்டு அரங்கில், பழமொழிகளை ஓவியமாக வரைந்திருந்த மாணவிகள், ஓவியத்தைப் பார்த்து பழமொழியை கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். திருக்குறள் வரிகளை 5 விநாடிகள் காண்பித்து மறைத்துவிடும் மாணவர்கள், பின்னர் அந்த வரிகளில் உள்ள சொற்கள் எழுதப்பட்டு, தனித்தனியாக உள்ள சார்ட் அட்டைகளை வரிசைப்படி சரியாக அடுக்குபவர்களுக்கும் பரிசு வழங்கினர். இதேபோல, வில்லுப்பாட்டு, பழமொழிகள், விடுகதைகள் என பல வடிவங்களில் மாணவர்களின் மொழித்திறன் வெளிப்பட்டது.

பள்ளி தாளாளர் ஏ.எம்.பழனிசாமி கூறும்போது, “செயல்வழியில் கற்கும்போதுதான் மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடன் கற்கின்றனர். தமிழ் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தவற்றுக்கு, ஒரு ஆசிரியர் விளக்கம் அளிப்பதைபோல, மாணவர்களே விளக்கம் அளித்து ஆச்சரியப்படுத்தினர். மாணவர் களின் திறமையை வெளிப்படுத்த, பள்ளி முதல்வர் கே.சுந்தரகிரி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் ஊக்குவிப்பே முக்கிய காரணம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

25 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்