மலிவு விலை உணவுப் பொருள்களை மத்திய அரசு அனுப்பாததால் மாநில அரசுக்கு சுமை ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமையல் எரிவாயு மானியத்தை முற்றாக நிறுத்தும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு, மக்கள் மீது அமிலத்தை வீசுவதாக அமைந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராகக் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதால், அதனைத் திரும்பப் பெறுவதாக மாநிலங்களவையில் அமைச்சர் கூறினாலும், அது கழுத்தில் தொங்குகிற கத்தியாகத் தான் இருக்கிறது. ஏனெனில், மத்திய பாஜக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நவீன தாராளமய கொள்கையின் ஒரு முக்கிய அம்சம், மானியத்தை வெட்டுவது அல்லது நிறுத்துவது.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தமிழக மக்களில் 50 சதவீதத்தினருக்குத்தான் பொது விநியோக முறை அமலாகும் என்ற நிலையில், கணிசமான மக்களை அந்தப் பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியே துரத்தும் ஏற்பாடு ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பும் மலிவு விலை அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவற்றைக் குறைக்கும் நடவடிக்கையை துவங்கி விட்டது. மொத்தத்தில் வெளிமார்க்கெட் விலைக்கு வாங்கி, பொது விநியோக முறைக்குப் பயன்படுத்தும் கூடுதல் சுமை மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொதுவிநியோக முறை திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்பங்களை முன்னுரிமை பகுதி, முன்னுரிமையல்லாத பகுதி என்று பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு பொதுவிநியோக முறை திட்டத்தையே சீர்குலைக்க முயற்சிக்கிறது.
அரசின் இத்தகைய முடிவுகளை ஏற்க மறுப்பதோடு ரத்து செய்திட மத்திய அரசிற்கு கூடுதல் நிர்ப்பந்தத்தை மாநில அரசு அளிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்க்க அனைத்துப் பகுதி மக்களும், கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
39 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago