மறைந்த தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "திமுக வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைமிகு வெற்றியைப் பெற்ற அந்த நன்னாளாம் மே 23 ஆம் நாள் மாலையில் அண்ணாஅறிவாலயத்தில் அண்ணா-தலைவர் கருணாநிதியின் சிலையின் கீழ் நின்று, மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவித்தபோது, "இந்த வெற்றியைக் காண, தலைவர் கருணாநிதி இல்லையே" என்ற எனது இதயத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன். அப்போது என்நா தழுதழுத்தது. உடல் நடுக்குற்றது.
எதிரில் நின்றிருந்த கழக உடன்பிறப்புகள் தந்த ஊக்கமும் உற்சாக முழக்கமும் என்னை இயல்புநிலைக்குக் கொண்டு வந்ததுடன், தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டாலும், அவர் வகுத்துத்தந்த கொள்கைப் பாதையில் பயணித்துதானே, இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம் என்கிற ஆறுதலுடன், கழகம் பெற்றுள்ள மகத்தானவெற்றியைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் எனத் தெரிவித்தேன்.
அந்த உணர்வுடன்தான், உங்களில் ஒருவனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 1924, ஜூன் 3. பைந்தமிழக வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிவிட்ட நாள். எத்தனை யுகமானாலும் இதனை எவராலும் அழிக்க முடியாது என்கிற வகையில் திருக்குவளை எனும் கிராமத்தில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, திராவிட இயக்கம் எனும் மானமும் அறிவும் வளர்க்கும் கொள்கையை ஏற்று, அதனைத் தமிழ்க்கொடியாக உயர்த்தி நின்று, தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறையும், தமிழ்நாட்டு அரசியலை சுழற்றும் அச்சாணியாக 50 ஆண்டுகளுக்கு மேலாகவும், இந்திய அரசியலில் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து உருவான போதெல்லாம் அதனைக் கட்டிக்காப்பதில் மூத்த தலைவராகவும் விளங்கிய கருணாநிதியின் பிறந்தநாள், ஜூன் 3.
ஒவ்வொரு ஆண்டும், அவரை நேரில் கண்டு வாழ்த்துகள் பெறும், முதல் ஆளாக இருப்பேன். தந்தையைக் காணும் தனயனாக அல்ல, தலைவரைக் காணும் தொண்டனாக, அவரது கோடானுகோடி உடன்பிறப்புகளில் ஒருவனாக நேரில் வாழ்த்துகளைப் பெறும்போது யானையின் பலம் உடலிலும் உள்ளத்திலும் பரவியது போன்ற உணர்வு ஏற்படும்.
எனக்கு மட்டுமா? கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், உடன்பிறப்பே என்ற தலைவரின் ஒற்றைச் சொல்லில் கட்டுண்டு கழகம் காக்கும் தொண்டர்கள் என அத்தனை பேரும் அவர் முகம் கண்டு வாழ்த்தவும், வாழ்த்து பெறவும் வாய்ப்பினைப் பெற்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கருணாநிதியின் கொள்கை முழக்க உரை கேட்டு நாம் மட்டுமல்ல, நாடே ஊக்கம் பெறும். ஜூன் 3 தலைவரின் பிறந்தநாள் என்பது, கழகத்தின் திருநாள். தமிழர்களின் பெருநாள்.
தலைவர் கருணாநிதி இல்லாமல், அவரது பிறந்தநாளை முதல் முறையாகக் கொண்டாடுகிறோம். இல்லை.. இல்லை..நம் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். இயற்கையின் சதியால் அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். நம் உள்ளத்தில், உணர்வினில், ஒவ்வவொரு செயல்பாட்டில், இயக்கத்தில், கொள்கையில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
தலைவர் கருணாநிதியின் நினைவின்றி நீங்களுமில்லை, நானுமில்லை. அவர் தந்த பயிற்சியால், அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட முயற்சியால், ஜனநாயகம் காக்கும் தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகளின் கொடுங்கரங்களில் சிக்காமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருக்கும் திமுகவின் தேர்தல் வியூகம், மொத்த இந்தியாவையும் தெற்குதிசை நோக்கித் திரும்பிப் பார்த்திடச் செய்திருக்கிறது.
திமுக வகுத்த மதச்சார்பற்ற வியூகம் என்கிற தமிழ்நாட்டின் தேர்தல் சூத்திரம், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அவசியம் என்கிற நிலை உருவாகியுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றிக் கூட்டணிக்குத் தலைமைதாங்கும் பொறுப்பு உங்களில் ஒருவனான எனக்கு வாய்த்திருந்தாலும், இந்த வெற்றிக்கு மூலகாரணமாகவும் மூல பலமாகவும் இருப்பவர் தலைவர் கருணாநிதி தான்.
எப்போதெல்லாம் நாட்டின் ஜனநாயகத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவின் வடதிசை,தெற்கு திசை நோக்கிப் பார்வை செலுத்துவதும், அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து, நாட்டைக் காக்கும் வெற்றிவியூகம் வகுப்பதும் தலைவர் கருணாநிதியின் அரசியல் அறமாக இருந்திருப்பதை இந்தியாவில் உள்ள எந்த இயக்கமும் மறுக்க முடியாது.
தலைவர் கருணாநிதி வகுத்தளித்த அரசியல் அறத்தைக் கடைப்பிடித்து இம்முறை நாம் பெற்றிருக்கின்ற வெற்றி, வடக்கை வியக்க வைக்கிறது. தெற்கை இணைக்க வைக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் பிரம்மிக்கச் செய்கிறது.
மகத்தான இந்த வெற்றியை தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கும் வகையில் ஜூன் 3 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கழகப் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜூன் 3 அன்று நந்தனத்தில் கூடிடுவோம்", என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
36 mins ago
விளையாட்டு
31 mins ago
கல்வி
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago