மீண்டும் குறைகிறது கூலி!- தவிக்கும் விசைத்தறியாளர்கள்

By பெ.சீனிவாசன்

இந்தியாவில் சுமார் 26 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. குறிப்பாக,  திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் உள்ளன. சுமார்  35 ஆயிரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் இவ்விரு மாவட்டங்களிலும் உள்ளனர். இதன் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள்வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இதில், ஆர்டர் அளிக்கும் ஜவுளி உற்பத்தியாளர் களுக்கு, கூலி அடிப்படையில் விசைத்தறியாளர்கள் துணி உற்பத்தி செய்து தருகின்றனர். விலைவாசி உயர்வு, காலமாற்றத்துக்கு ஏற்ப உற்பத்தியாளர்களிடமிருந்து குறிப்பிட்ட சதவீதம்  கூலி உயர்வை பெற்றுத் தருவதற்காக,   1992 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒப்பந்தம்  நிறைவேற்றப்பட்டு,  கூலி உயர்வு கிடைத்ததால் கூலிக்கு நெசவு செய்வோரின் பொருளாதாரம் சீராக இருந்தது. இந்நிலையில்,  2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. 2011-ல் ஒப்பந்தக் கூலியிலிருந்து 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டிய கூலி உயர்வு, இதுவரை வழங்கப்படவில்லை என்று  தெரிவிக்கப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கூலி உயர்வைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஏற்கெனவே  வழங்கப்பட்டு வரும் கூலியில் இருந்து, குறிப்பிட்ட சதவீதத்தை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பு தற்போது முடிவு செய்துள்ளனர். இது கூலிக்கு நெசவு செய்வோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கச் செயலர் எம்.பாலசுப்ரமணியன் கூறும்போது, “மந்த நிலை காரணமாக தற்போது வழங்கி வரும் கூலியிலிருந்து, குறிப்பிட்ட சதவீதத்தை குறைக்க உள்ளதாக உற்பத்தியாளர்களில் சிலர்  தெரிவித்துள்ளனர்.

தற்போது,  20 கவுன்ட் நூல் 50 இன்ச் அளவுக்கு மீட்டருக்கு ரூ.5.30 வழங்கப்படுகிறது. 63 இன்ச் அளவுக்கு மீட்டருக்கு ரூ.6.65 வழங்குவதற்குப்  பதிலாக,  தற்போது ரூ.6.30 வழங்கி வருகின்றனர். ஏற்கெனவே ஒப்பந்தப்படி கூலி வழங்காத நிலையில், தற்போது வழங்கி வரும் கூலியை மேலும் குறைத்தால் நாங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.  கிடைத்து வரும் சிறிதளவு லாபமும் குறைந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்?

கூலி குறைப்பு எதனால்?

இது தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் பேசியபோது, “கடந்த 2 மாதங்களாகவே வர்த்தகத்தில் மந்த நிலை நிலவுகிறது. குஜராத் போன்ற வடமாநிலங்களில் துணி வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். குஜராத்தில் துணி பிரின்டிங், சாயமிடுதல் போன்ற பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. வாரத்தில் 5 நாட்கள் பணிகள் நடப்பதில்லை. இதைத்தவிர, கடந்த 3 மாதங்களாகவே வியாபாரிகளிடம் வாங்கும் திறனும்  50 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. நூல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தானியங்கி மற்றும் விசைத்தறி என இரு வகைகளிலும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பெருமளவு தேக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தையும் சரியாக இல்லை. இதன் காரணமாகவே கூலியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் 2 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே இருக்கும். அதற்கு மேல் குறைக்கும் எண்ணமில்லை. சந்தை சீரடையும்போது மீண்டும் தற்போது வழங்கப்படும் கூலியை வழங்கி விடுவோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

55 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்