மதுரையின் முக்கிய விழாவான சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப் பட்டுஉடுத்தி வைகை ஆற்றில் நேற்றுஅதிகாலை 5.50 மணிக்கு இறங்கினார். ‘கோவிந்தா, கோபாலா’’ என முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
சைவமும், வைணவமும் இணையும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.8-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.15-ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.16-ல் திக்கு விஜயம், ஏப்.17-ல் திருக்கல்யாணம், ஏப்.18-ல் தேரோட்டம் நடந்தது.
நேற்று தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு செய்ய மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவுபெற்றது.
இந்நிலையில், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 15-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி 17-ம் தேதி மாலை அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை மதுரைக்குள் நுழைந்த கள்ளழகரை மூன்று மாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்ற எதிர்சேவை நடைபெற்றது.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைநேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்த கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது. தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்துக்கு மாறி ஆயிரம்பொன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு நள்ளிரவில் காட்சியளித்தார்.
இந்த தரிசனத்தைக் காண தல்லாகுளம் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் வந்த கள்ளழகர்,பல்வேறு சமுதாய மண்டகப்படிகளில் எழுந்தருளி கோரிப்பாளையம் வழியாக வைகை வடகரையிலுள்ள ஆழ்வார்புரம் வந்தடைந்தார்.
வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க வீரராகவப்பெருமாள் அதிகாலை 5.20 மணிக்கே வந்து காத்திருந்தார். ஆற்றில் இறங்கும்போது கள்ளழகரை தரிசிக்க பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். திருவிழாவுக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் ஆற்றில் சென்றது. கள்ளழகர் இறங்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் உள்ள தண்ணீர் மலர்களால் நிரப்பப்பட்டிருந்தன. கள்ளழகருக்காக காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணைப்பிளக்கும் வகையில் முழக்கமிட்டனர். அப்போது கள்ளழகர் காலை 5.50 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்.
அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சர்க்கரை நிரப்பிய செம்பில் சூடம்ஏற்றி வழிபட்டனர். ஆற்றுக்குள் லாலா ரங்க சத்திரம் தர்ம ஸ்தாபன சந்திப்பு மண்டகப்படியில் காத்திருந்த வீரராகவப்பெருமாள் எதிரே வந்து கள்ளழகரை அழைத்துச் சென்று மண்டகப்படியை 3 முறை வலம் வந்தார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார்.
வைகை ஆற்றங்கரையிலும், ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம், கீழ்ப்பாலம், குருவிக்காரன் சாலை பாலம், ஒபுளா படித்துரை ஆகிய பகுதிகளில் பல லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு காலை 7.20 மணிக்கு ஆற்றிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதிச்சியம்ராமராயர் மண்டபம் அருகே தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது கள்ளழகரை குளிர்விக்கும் வகையில் தோல் பைகளில் இருந்த தண்ணீரை பக்தர்கள் பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அண்ணாநகர் வழியாக இரவில் வண்டியூர் சென்ற கள்ளழகர், பெருமாள் கோயிலில் தங்கினார்.
இன்று தசாவதாரம்வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார். பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21-ம் தேதிதல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். 22-ம் தேதி கள்ளழகர் மலைக்குப் புறப்படுகிறார். 23-ம் தேதி காலை 10.30 மணியளவில் அழகர் கோயிலைச் சென்றடைகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
வேலை வாய்ப்பு
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago