தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருவதாக அவர் தெரிவித்தார். தேமுதிக அதிக இடங்கள் கேட்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளோடு தேமுதிகவையும் சேர்க்க தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பாஜகவுடன் தேமுதிக துணைச் செயலர் சுதீஷ் பேசி வந்தார். இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதற்காக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மாலை 5.30 மணி அளவில் சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்துக்கு பியூஷ் கோயல் சென்றார். அவருடன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் சென்றனர்.
விஜயகாந்த் வீட்டில் அவர்களை சுதீஷ் வரவேற்றார். பின்னர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தனர். 6 மணி முதல் 6.35 மணிவரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர், வெளியே வந்து, சுதீஷ், பிரேம லதாவுடனும் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அப்போது முரளிதர ராவும் உடன் இருந்தார். பியூஷ் கோயல் உள்ளிட்டோர் 6.50 மணி அளவில் வெளியே வந்தனர். செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது:
விஜயகாந்த் எனது பழைய நண்பர். அவர் மற்றும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரது அழைப்பின் பேரில் வந்தேன். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் சார்பில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்து, அவர் விரைவாக குணமடைந்து பூரண நலன் பெற வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தேன்.
சிகிச்சைக்கு பிறகு அவர் நன்கு தேறி யுள்ளார். மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை விஜயகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளை தெரி வித்தேன்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ‘‘பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. மனித வாழ்க்கையில் கூட்டணி, அரசியல் ஆகியவற்றை தாண்டி நெருக்கமான நட்பு உள்ளது. முக்கிய மாக அவரது உடல்நிலை குறித்து அறிவதற்காகவே வந்தேன்’’ என்றார்.
பியூஷ் கோயல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகும், விஜயகாந்த் வீட்டில் அவருடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.
அதிமுக கூட்டணியில், தேமுதிகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது. அந்த செய்தியை தெரி விக்கவே விஜயகாந்தை பியூஷ் கோயல் சந்தித்துள்ளார்.
ஆனால், தேமுதிக தரப்பில் 9 தொகுதிகள் கேட்கின்றனர். 20 முதல் 23 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிட விரும்புவதால், தேமுதிகவின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago