பெண் எஸ்பி அளித்த பாலியல் புகாரின் மீது ஐஜி முருகன்மீது குற்றவியல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவுகளை உயர் நீதிமன்றம் உயர் அதிகாரிகள் அறைகளில் இனி கட்டாயம் சிசிடிவி கேமரா இருக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.
புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டார். இதேபோல், ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் தொடர்ச்சியாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணை நடந்து வருகிறது. புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது என வழக்கு விசாரணையில் நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார்.
சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு நீதிபதி அறிவுறுத்தினார். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்த வழக்கில் அதிரடியாக அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில் ‘‘ ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டிஜிபி லஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா கமிட்டி, விசாரணையை முடித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
பெண் எஸ்பி அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐஜி முருகனுக்கு எதிராக பணி விதிகளின் கீழ் தலைமைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
மேலும்,உயரதிகாரிளுக்கு எதிரான புகார்களை தவிர்க்கவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண் அதிகாரிகள், தொழிலாளர்களை பாதுகாக்கவும் உயர் அதிகாரிகளின் அறைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு பரிந்துரைத்தார்.
மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன்பாக தானும் அப்படி நடக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளின்படி, தன்னுடைய அறையிலும் கேமரா பொருத்த உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவு என அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
53 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
44 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago