Published : 07 May 2024 09:34 AM
Last Updated : 07 May 2024 09:34 AM

ராமர் கோயிலுக்கு சென்றதால் காங். என்னை வெறுத்தது: கட்சியில் இருந்து விலகிய ராதிகா கேரா தகவல்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா கேரா, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நேற்று முன்தினம் விலகினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ராமர், சனாதனம், இந்து மதத்துக்கு எதிரானது என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நம்பவில்லை. சமீபத்தில் நான் எனது பாட்டியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றிருந்தேன். கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, என்னுடைய வீட்டின் கதவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கொடியை ஒட்டி இருந்தேன். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது.

ராமர் கோயிலுக்கு சென்று வந்தது தொடர்பான புகைப்படம், வீடியோவை என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதற்காக காங்கிரஸ் கட்சியினர் என்னை கண்டித்தனர். தேர்தல் நடைபெறும் நிலையில் ஏன் ராமர் கோயிலுக்கு சென்றீர்கள் என கேள்வி எழுப்பினார்கள்.

மதுபானம் கொடுத்தார்கள்: ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸின் ஊடக பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா எனக்கு மதுபானம் கொடுத்தார். மேலும் மதுபோதையில் இருந்த அவர் 5 முதல் 6 கட்சி நிர்வாகிகளுடன் வந்து என்னுடைய அறையின் கதவை தட்டினார். இதுகுறித்து சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்களிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. காங்கிரஸின் இந்து விரோத சித்தாந்தத்தைப் பின்பற்ற மறுத்ததால் என்னை வெறுத்தார்கள்.

சுஷில் ஆனந்த் சுக்லாவுடன் பேசுவதற்காக ஒரு நாள் மாலை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அவரும் 2 செய்தித் தொடர்பாளர்களும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு அறையில் வைத்து என்னை பூட்டினர். நான் அழுதபோதும் கதவைத் திறக்கவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு தப்பினேன். ராமரை ஆதரிக்கிறேன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். எனவேதான் கட்சியிலிருந்து விலகி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x