85% புகையிலை எச்சரிக்கைப் படங்களை நீக்கக்கூடாது; சட்டப் பாதுகாப்பு தேவை: அன்புமணி

By செய்திப்பிரிவு

புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிகரெட், பீடி, போதைப் பாக்குகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆணை செல்லாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது ஆகும்.

85% அளவு எச்சரிக்கைப் படங்கள் செல்லாது என்பதற்காக கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள காரணங்கள் எதையும் ஏற்க இயலாது. புகையிலை எச்சரிக்கைப் படங்கள் 40 விழுக்காட்டிலிருந்து 85%ஆக உயர்த்தப்பட்டதற்கு அடிப்படை எதுவுமில்லை என்றும், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு மாறாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் நீதிபதிகள் தனித்தனியாக அளித்த தீர்ப்புகளில் கூறியுள்ளனர். நீதிமன்றத்துக்கு இதுகுறித்த புரிதல் இல்லை அல்லது மத்திய அரசுத் தரப்பில் சரியாக புரிய வைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

புகையிலை எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடுவதன் மூலம் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 40% அளவில் எச்சரிக்கைப் படம் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து அப்போது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன.

அதுமட்டுமின்றி, எச்சரிக்கைப் படங்களின் அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அப்போதே முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே படங்களின் அளவு 85% ஆக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அனைத்து அம்சங்களையும் நன்றாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான். உலகின் பல நாடுகளில் இதைவிட கடுமையான எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் வழக்கம் உள்ளது. பிரேசில் நாட்டில் 100% அளவுக்கு எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்படுவது மட்டுமின்றி, சிகரெட்டுகளில் 4700 வகை நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் பார்த்தாலே புகையிலைப் பழக்கத்தை கைவிடும் வகையில் அருவருக்கத்தக்க படங்கள் வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவதால் நல்ல பயன் கிடைத்திருப்பதாக உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை ஆய்வில் (Global Adult Tobacco Survey)) தெரியவந்துள்ளது. 85% அளவு எச்சரிக்கைப் படங்களால் சிகரெட் புகைப்பவர்களில் 62 விழுக்காட்டினரும், பீடி புகைப்பவர்களில் 54 விழுக்காட்டினரும், புகையில்லாத புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களில் 46 விழுக்காட்டினரும் தங்களின் பழக்கத்தை கைவிடுவது குறித்து சிந்தித்து வருவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. எச்சரிக்கைப் படங்கள் பயனளித்துள்ளன என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு எதிராக இந்நடவடிக்கை இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அது ஓரளவு உண்மையே. எச்சரிக்கைப் படங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் புகையிலை நிறுவன அதிபர்களும், அவர்களின் ஆதரவாளர்களும்தான். அவர்கள் அளித்த அறிக்கை அபத்தத்தின் உச்சம் ஆகும்.

சர்க்கரை நோயை உருவாக்குவதற்காக வெள்ளை சர்க்கரை தடை செய்யப்படாத நிலையில், புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்காக புகையிலைப் பொருட்களுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்? என்று உறுப்பினர் ஷியாம் சரண் குப்தாவும், தினமும் ஒரு பாட்டில் மதுவும், 60 சிகரெட்டும் பிடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; உண்மையில் புகையிலையில் ஒருவித மூலிகைத் தன்மை உள்ளது என்று இன்னொரு உறுப்பினர் ராம் பிரசாத் சர்மாவும் கூறியிருந்த நிலையில், அந்த குழுவின் பரிந்துரையை ஏற்றிருந்தால் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது மதுவும், புகையிலையும் உடல் நலனுக்கு ஏற்றது என்றுதான் குறிப்பிட வேண்டும். இது எந்தவகையில் மக்களுக்கு நல்லது?

புகையிலையின் தீமைகள் குறித்தும், எச்சரிக்கைப் படங்களின் அவசியம் குறித்தும் உயர் நீதிமன்றத்திற்கு விளக்க மத்திய அரசு தவறி விட்டதாகவே கருதுகிறேன். இதுகுறித்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அவற்றை உச்ச நீதிமன்றமே விசாரித்திருக்க வேண்டும். அந்த வழக்குகளை கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசு வழக்கறிஞர்கள் அனுமதித்திருக்கக் கூடாது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புகையிலைப் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதைத் தடுக்க வேண்டுமானால் புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அதற்கான சிறந்த கருவி எச்சரிக்கைப் படங்கள்தான். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்