பிரதமர் மோடி செல்லும் இடங்களில் பயன்படுத்தும் ஒரே வார்த்தை `மேக் இன் இந்தியா’. சீனாவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாற்றும் போதும், `மேக் இன் இந்தியா’ பற்றி மோடி குறிப்பிடத் தவறவில்லை.
`மேக் இன் இந்தியா’ மீது மோடிக்கு ஆர்வம் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் மூலம் உருவாகும் அதிக உற்பத்தியை ஏற்றுமதி செய்யலாம், ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் நிதிப்பற்றாக்குறை குறையும். மேலும் வேலையில்லாமல் இருக்கும் பல இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும் என ஒரே கல்லில் பல மாங்காய்தான் `மேக் இன் இந்தியா’ கோஷத்தின் அடிநாதம்.
இதற்காக 25 துறைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்று அறிவித்து செல்லும் இடங்களில் எல்லாம் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க வாருங்கள் என்று அறிவித்தார்.
திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சனம் செய்தார். சீனா ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்காக நாமும் அதே முறையை பின்பற்றக்கூடாது. சீனாவும் இந்தியாவும் வேறு வேறு. இன்னொரு ஏற்றுமதியை சார்ந்த நாடு உலகத்துடன் இணைய முடியாது. சர்வதேச அளவில் தேவை குறைவாக இருக்கிறது. அதனால் இந்தியாவில் தயாரிக்காமல் இந்தியாவுக்காக தயாரிக்க வேண்டும் (make for india) என்று கூறினார்.
அடுத்த சில நாட்களிலேயே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, குறைந்த செலவில் தரமான பொருட்களை தயாரிப்பதுதான் முக்கியமே தவிர, அது இந்தியாவில் விற்கப்படுகிறதா இல்லை ஏற்றுமதியாகிறதா என்ற கவலை தேவை இல்லை. இந்தியாவில் இருந்து தரமான சேவையை எப்படி பெற்றார்களோ அதுபோல தரமான உற்பத்திக்கும் தேவை இருக்கும். அது இந்தியாவில் இருந்தால் என்ன வெளிநாட்டில் இருந்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் இப்போது மேக் இன் இந்தியா குறித்த பல சந்தேகங்களை சர்வதேச தலைவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். முதலாவது மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் போதுமான நிலம் கிடைக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் நிலம் கையகப் படுத்தும் மசோதா இன்னும் நிறைவேற வில்லை. அதனால் நிலம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
அடுத்து இந்தியாவின் முக்கிய பிரச்சினை மின்சாரம். இன்னும் போதுமான அளவு மின்சாரம் இல்லை. இதற்கு, நிலக்கரி, மின் நிலையங்கள், கடன் என இந்த துறையை சுற்றி பல பிரச்சினைகள் உள்ளன. இதுவரை இருந்த மாநில அரசுகள் எதிர்கால தேவையை சரியாக கணிக்கத் தவறிவிட்டன. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மின்சாரம் பெரிய சவாலாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
தவிர, சாலை உள்ளிட்ட பல உள்கட்டமைப் புகளும் சவாலாக உள்ளன. இந்தியாவில் கல்வி கற்றவர்கள் அனைவருக்கும் வேலைக்கு தகுந்தவர்களாக இல்லை என்பது சொல்லித் தெரிய தேவை இல்லை. இதற்காக தேசிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருந்தாலும், தகுதி வாய்ந்த நபர்களுக்கான பற்றாக்குறை இன்னமும் இருக்கச்செய்கிறது.
தவிர மாநில அரசுகளின் முரணான கொள்கைகளும் இருக்கிற சூழலில் மேக் இன் இந்தியா நிச்சயம் சவால்தான். மேக் இன் இந்தியா பிரசாரத்துக்கு செலவு செய்வது எப்படி முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இங்குள்ள கட்டமைப்பினை மாற்றுவதும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago