Published : 09 May 2024 06:42 PM
Last Updated : 09 May 2024 06:42 PM

“அதானி போன்றோருக்காக மட்டுமே மோடி அரசு செயல்பட்டது” - ராகுல்

மேடக் (தெலங்கானா): அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய நேரம் இது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் மேடக் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டில் உள்ள ஏழைகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்கிறது. காங்கிரஸ் கட்சியும், கோடிக்கணக்கான இந்திய மக்களும் போராடி சாதித்த உங்கள் இதயத்தின் குரல்தான் அரசியலமைப்பு புத்தகம். ஆனால் பாஜகவினர் அரசியல்சாசனத்தை ஒழிப்போம் என்று தெளிவாக கூறிவிட்டனர்.

இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலானது. ஒருபுறம், அரசியலமைப்பைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் இண்டியா கூட்டணி. மறுபுறம், அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சிக்கும் நரேந்திர மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இது அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய நேரம். நாம் அரசியலமைப்பை பாதுகாப்போம். இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் ஒழிக்க முடியாது.

அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்காகவே நரேந்திர மோடியின் அரசு செயல்பட்டுள்ளது. இன்று நாட்டில் 70 கோடி மக்களின் பணம் 22 பேரிடம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது வங்கிக் கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

இந்தியாவில், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித்துகள், மற்றும் சிறுபான்மை வகுப்பினரின் மக்கள் தொகை சுமார் 90% ஆகும். ஆனால் அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் எந்த பலனும் இல்லை. எனவே, இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவினரும் நாட்டில் தங்கள் மக்கள் தொகை மற்றும் பங்கேற்பு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். எங்கள் ஊழியர்கள் உங்களுக்காக வேலை செய்வார்கள். நான் டெல்லியில் உங்களுக்கான ராணுவ வீரராக இருப்பேன். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் அதை டெல்லியில் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.

நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். காங்கிரஸ் கட்சி, வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜூன் 4-ஆம் தேதி அரசு அமைந்தவுடன் 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணியை நாங்கள் தொடங்குவோம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x