பட்டுப்போன மரங்களால் பறந்துபோன பறவைகள்

By ச.கார்த்திகேயன்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் போதிய பராமரிப்பின்றி மரங்கள் பட்டுப்போனதால், தேடி வந்த பறவைகள் ஓடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் அருகில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தை இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு 1798-ல் அடையாளம் கண்டு, 1858-ல் மேம்படுத்தியது. 1936-ம் ஆண்டு வேடந்தாங்கலில் உள்ள ஏரி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1962-ல் மெட்ராஸ் வன சட்டப்படி பறவைகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு, அச்சட்டத்தின் கீழ், வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற நாரை, வர்ண நாரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பறவைகள் ஆண்டுதோறும் வந்து, இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்த பறவைகள் சரணாலயத்தில் முக்கிய ஆதாரமே நீரும், மரங்களும் தான். இந்நிலையில், சரணாலய எல்லைக்குள் சுமார் 90 மரங்கள், ஏரியில் நீர் இருந்தும் காய்ந்து கிடக்கின்றன. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த மரங்களைப் பாதுகாக்க வனத்துறை சார்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால், அங்குள்ள மரங்கள் காய்ந்து பட்டுப்போய் காணப்படுவதாக, பறவைகளை பார்வையிட வரும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பறவைகள் சரணாலய அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பறவைகள் அதிகம் தங்கும் பிரதான பகுதியில் எந்த மரங்களும் காயவில்லை. சரணாலயத்தின் எல்லைப் பகுதிகளில் தான் மரங்கள் காய்ந்துள்ளன. காய்ந்துள்ள மரங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கருவேலமரங்கள். இவை வறண்ட பகுதியில் வளரக்கூடியவை. வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகள் இம்மரங்கள் நீரில் இருந்தாலும் பட்டுப்போக வாய்ப்புள்ளது.

வழக்கமாக வனத்துறை சார்பில் ஏரிகளில் வளர்க்கப்படும் கருவேல மரங்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு, வனத்துறையால் வெட்டி விற்பனை செய்யப்படும். இங்கு வன உயிரின சட்டப்படி மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதால், இங்குள்ள மரங்கள் வெட்டப்படவில்லை. அவை வயது முதிர்வு காரணமாக பட்டுப் போயுள்ளன. இதிலும் பறவைகள் வந்து அமருவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதால், காய்ந்த நிலையிலும் இம்மரங்கள் வனத்துறையால் அகற்றப்படவில்லை. பறவைகள் அமரவும், கூடு கட்டி வாழவும் ஏராளமான மரங்கள், வேடந்தாங்கல் ஏரியில் உள்ளன. பட்டுப்போன மரங்களால் பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும், அப்பகுதியில் இந்த ஆண்டு 500 கருவேல மரங்கள் மற்றும் 1500 நீர் கடம்பு மரங்களை வனத்துறை நட்டுள்ளது’’ என்றார்.

குருவிகளைத்தான் தொலைத்து

விட்டோம். நம் சந்ததிகளுக்காக தேடி வரும் பறவைகளையாவது பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

விளையாட்டு

55 mins ago

க்ரைம்

59 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்