முகங்கள்: வற்றலால் வளருது வருமானம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் அருகேயுள்ள போலியம்மனூர் கிராமத்துக்குள் நுழைந்ததுமே பச்சைக் காய்கறிகளின் மணம் நாசியைத் துளைக்கும். பெரும்பாலான வீடுகளில் பெண்கள் காய்கறியும் கத்தியுமாகக் காட்சிதருகிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக அமர்ந்தபடி திருமண வீட்டில் காய்கறிகளை நறுக்குவதுபோல வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

போலியம்மனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வற்றல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வற்றல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பணிபுரிகின்றனர். போலியம்மனூருக்கு அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2,000 பேர் வற்றல் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாகப் பெண்களுக்கு இதில் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேலை தேடி பிற கிராமங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துச் சொந்த ஊரிலேயே அனைவருக்கும் வேலை கிடைப்பதால் பெண்கள் ஆர்வத்துடன் இந்தத் தொழிலைச் செய்துவருகிறார்கள். பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தக் கிராமம் தன்னிறைவு பெற்றுள்ளது என்று சொல்லும் வகையில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருக்கிறது.

மிளகாய், கொத்தவரங்காய், பாகற்காய், வெண்டைக்காய், மாங்காய், கோவைக்காய், கத்தரிக்காய், மணத்தக்காளி, சுண்டைக்காய் என ஒன்பது வகையான காய்களிலிருந்து வற்றல்களை இந்தக் கிராமத்தினர் தயாரிக்கின்றனர். காய்கறிச் சந்தையில் எந்தக் காயின் விலை மலிவாக உள்ளதோ அதை வாங்கி மதிப்புக் கூட்டுப் பொருளாக்கி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

முதுமையிலும் வேலைவாய்ப்பு

தோழிகளிடம் அரட்டையடித்தபடி இருந்தாலும் காயை நறுக்குவதில் கண்ணாக இருக்கிறார் வள்ளியம்மாள். “விவசாயக் கூலிக்குத்தான் எங்க கிராமத்துப் பெண்கள் அதிக அளவுல போயிட்டு இருந்தோம். இந்த ரெண்டு வருஷமா போதுமான மழை இல்லாததால் விவசாய வேலை எங்களுக்குக் கிடைக்கலை.

இந்த வத்தல் தொழில்தான் எங்களுக்குப் பெரிய உதவியா இருக்கு. எங்க கிராமத்துல இதைப் பலரும் குடும்பம் குடும்பமாகச் செய்யறாங்க. பெரிய அளவில் தொழில் செய்யறவங்க, பெண்களுக்கு வயது வித்தியாசமில்லாம தினமும் வேலை தருவாங்க. எனக்கு எண்பது வயசாகுது.

என்னால கழனிகாட்டுக்குப் போய் வேலை செய்ய முடியுமா? அதனால உட்கார்ந்தபடியே காய்கறிகளை வெட்டித் தர்றேன். இதுல தினமும் 250 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறேன். எங்க ஊர்ல வீட்டுக்கு ஒருத்தராவது இந்தத் தொழிலைச் செய்யறோம்” என்கிறார் வள்ளியம்மாள்.

பெண்கள் நறுக்கித் தரும் காய்களைக் காயவைத்தபின் உப்பு நீரில் ஊறவைத்து மீண்டும் காயவைக்கிறார்கள். வற்றல் போடுவது எளிது என்பதாலேயே பலரும் இந்தத் தொழிலை ஆர்வத்துடன் செய்துவருகிறார்கள்.

பெண்களின் பங்களிப்பு

மோர்மிளகாய் உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் எஸ்.கோபி, “எங்க கிராமத்துப் பெண்கள் விவசாய வேலை இல்லைன்னு வெளியூர்களுக்கு வேலைதேடிப் போறதைத் தடுத்து, அவங்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளோம்.

வற்றல் வகைகளைத் தமிழகம் மட்டுமில்லாம கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்புறோம். எங்க ஊரில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளோம் என்பதில் என்னைப் போன்ற வற்றல் தயாரிப்பாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. குறிப்பா பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் எங்கள் கிராமம் தன்னிறைவு பெற்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

வர்த்தக உலகம்

36 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்