வாய் பேச முடியாத டேனிஷ் (தனுஷ்) என்னும் இளைஞ னுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல். வாய்ப்பு தேடி மும்பைக்கு வருகிறார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து உதவி இயக்குநர் அக்ஷரா (அக்ஷரா ஹாசன்) உதவ முன்வருகிறார். ஆனால், பேசமுடியாத நடிகரை பாலிவுட் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
பேச இயலாதவர் இன்னொருவர் குரலால் ‘பேச’ தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஆனால் அதற்கு ஒரு குரல் வேண்டுமே? பல குரல் களைப் பரிசீலித்துத் திருப்தி அடை யாத அக்ஷராவும் டேனிஷும் மும்பை கல்லறைத் தோட்டத்தில் முதியவர் அமிதாப் சின்ஹாவின் (அமிதாப் பச்சன்) கம்பீரமான குரலைக் கண்டு பரவசம் அடைகிறார்கள். சினிமா கனவு நிறைவேறாமல் விரக்தியில் குடிகாரனாக அலையும் அமிதாபைச் சம்மதிக்கவைக்கிறார்கள். ஷமிதாப் என்ற பெயருடன் அறிமுகமாகிறார் டேனிஷ். அமிதாபின் கம்பீரக் குரலா லும் தன் நடிப்புத் திறமையாலும், ஒரே படத்தில் பெரிய நட்சத்திரமாகி விடுகிறார் ஷமிதாப்.
மூவரின் திறமையான நாடகத் தால் நிஜ வாழ்விலும் இந்த இரவல் குரல் தொடர்கிறது. வெற்றியும் தொடர் கிறது. கனவு போன்ற இந்த வளர்ச்சிக்குக் குறுக்கே வருகிறது ஈகோ யுத்தம். டேனிஷின் நட்சத்திர அந்தஸ்து தன் குரலால்தான் கிடைத் தது என்று அமிதாப் நினைக்க, தன் திறமையால் தான் எல்லாமே நடக்கிறது என டேனிஷ் மமதை கொள்ள, வெற்றிக் கூட்டணி உடைகிறது. டேனிஷின் நட்சத்திர பிம்பம் சரியத் தொடங்குகிறது. இருவரில் யார் ஈகோ ஜெயித்தது?
திரைக்கதை தனுஷை சுற்றி நகர்ந்தாலும் அமிதாபின் குரல்தான் படத்தின் நிஜக் கதாநாயகன்.
திரையுலகில் இருக்கும் போட்டி, பொறாமை, சுயநலம், நட்சத்திர போதை எனப் பல அம்சங்களையும் இப்படம் கையாள்கிறது.
தனுஷுக்கு அக்ஷராவின் உதவி கிடைக்கும் விதம், அவருக்கான மாற்று ஏற்பாடுகள் நடக்கும் வேகம் எல்லாம் மசாலா சினிமாவுக்கே உரிய சுதந்திரங்கள். படத்தின் ஆதார மையத்தை பாதிக்காததால் இவற்றை மன்னித்துவிடலாம். இரவல் குரல் என் னும் ரகசியத்தை மூவரும் காப்பாற்று வதற்கான காட்சிகள் சுவாரஸ்ய மானவை.
‘உன் எடையைவிட என் குரல் கனமானது’ என்று அமிதாப் கெத்து காட்டுவதும் மது, தண்ணீர் ஆகிய வற்றை வைத்துப் பேசும் வசனங் களும் அரங்கை அதிர வைக் கின்றன. டேனிஷுக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்படும் நெருக்கத்தின் போது டேனிஷும் அமிதாபும் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் ரகளை. ஈகோ யுத்தம் மெல்ல மெல்ல முறுக் கேறிக்கொண்டே போகும் விதம் நம்பக மாக உள்ளது. இருவரின் பிரிவும் அதனால் இருவரும் படும் அவஸ்தை களும் சரியாகவே சித்தரிக்கப் பட்டுள்ளன.
படத்தின் முதல் பாதி விறுவிறுப் பாக, புத்துணர்ச்சியுடன் நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. உருக்க மான காட்சிகளை அமைப்பதில் வல்லவரான பால்கி தன் முத்தி ரையை முதல் பாதியில் நன்கு பதித் திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் உருக்கம் எல்லை மீறி மிகை உணர்ச்சியாகிவிடுகிறது. மனதை கனக்கச் செய்யும் முடிவுதான் நல்ல படத்துக்கு அடையாளம் என்று யார் சொன்னது?
எனினும் அமிதாப், தனுஷ் நடிப்பு, இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு ஆகியவை இந்த குறை களை மறக்கச் செய்துவிடுகின்றன. ‘சீனி கம்’ படத்தில் அத்தனை பாடல் களுக்கும் தனது பழைய தமிழ் டியூன் களை பயன்படுத்திய ராஜா, இதில் அப்படிச் செய்யவில்லை. இரண்டே நிமிடம் மட்டும் வரும் ‘ஆசைய காத்துல தூது விட்டு’ டியூன் தவிர, மற்ற பாடல்கள் புதுசு.
நடிப்பில் அசத்துகிறார் தனுஷ். உடல் மொழியால் பேசும் கலை அவருக்கு நன்கு வசப்படுகிறது. ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்ச்சிகளை உணர்த்தும் காட்சிகள் அவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றுகின்றன. அமிதாபை முதலில் சந்திக்கும்போது அவரிடம் நடித்துக் காட்டுவது, அவராலேயே அவமானப்படுவது, அவரைப் பிரிந்த பிறகு உணர்ச்சியைக் கொட்டுவது, உண்மையைச் சொல்லிவிட வேண் டும் என்பதற்கான காரணங்களை அடுக்குவது ஆகிய காட்சிகளில் அபாரம்.
பேசாமல் தனுஷ் ஸ்கோர் செய்ய, பேச்சின் மூலமாகவே அமிதாப் ஸ்கோர் செய்கிறார். தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏமாறும் காட்சிகளிலும், தனுஷை சீண்டும் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார். தன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று குமுறும் இடத்தில் மலைபோல உயர்கிறார். கடைசி காட்சியில் பேசாமலேயே நெகிழவைக்கிறார்.
இரண்டு வலிமையான நடிகர்களு டன் அக்ஷரா ஹாசன் (அறிமுகம்) தன் இருப்பை திரையில் வெற்றிகரமாகப் பதிவுசெய்திருக்கிறார். படத்தொகுப் பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம்.
திரைக்கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது, நடிகர்களுக்காகத் திரைக்கதை அமைப்பது என்ற இரண்டு வகைகளில் ஷமிதாப் இரண்டாவது வகை. அபார நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை தொய்வையும் மிகையான காட்சிகளையும் மீறிப் படத்தை ரசிக்கவைக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
8 hours ago