இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வியாளர், தத்துவ ஞானி, அரசியல் அறிஞர். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஐ ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிக அரிதாகத்தான் பேசியிருக்கிறார். எனவே இவரது சிறு வயது சம்பவங்கள், கல்வி ஆகியவை குறித்த விவரங்கள் வெகு காலத்திற்குப் பின்னரே தெரியவந்துள்ளன. 1888 செப்டம்பர் 5-ல் ஆன்மிகத் தலமான திருத்தணியில் பிறந்தார். இவரது தந்தை வீராசாமி, தாய் சீதம்மா. இவர்கள் ஆன்மிகக் காரியங்களில் ஈடுபட்டுவந்தனர்.
1896-ல் ராதாகிருஷ்ணன் பள்ளிப் படிப்புக்காகத் திருப்பதி அனுப்பப்பட்டுள்ளார். திருப்பதியில் ஆங்கில மிஷினரி பள்ளியில் நான்கு ஆண்டுகள் படித்தார். பின்னர் வேலூரில் இருந்த எலிசபெத் ராட்மேன் வர்கீஸ் கல்லூரியில் 1904-ம் ஆண்டுவரை பயின்றார். அமெரிக்க கிறிஸ்தவ மிஷன் நடத்திய கல்லூரி அது. இதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். இங்கு இவர் பிஸிக்கல் சயின்ஸ் பாடத்தை நுட்பமாகவும் ஆர்வத்துடனும் கற்றார்.
முதுகலை படித்த பின்னர் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது இங்கிலாந்து சென்று படிப்பதற்காக உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். அதே நேரம் சென்னையில் வேலை தேடிப் போராடிக் கொண்டிருந்தார். இந்தச் சிரமமான சூழலில் வில்லியம் ஸ்கின்னர் என்பவரது உதவியால் சென்னை மாநிலக் கல்லூரியில் தற்காலிகமாக ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது உளவியல், ஐரோப்பிய தத்துவம் போன்ற பல பாடங்களை நடத்தினார். தருக்கம், ஒளிவுக் கோட்பாடு, ஒழுக்கவியல் கோட்பாடு ஆகிய பாடங்களில் தனிச் சிறப்புடன் விளங்கினார். இந்தக் கல்லூரியில் பணியாற்றும்போது தான் அவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார். இந்திய, ஐரோப்பிய இதழ்களில் தனது எழுத்துகள் பிரசுரமாவதில் அக்கறை காட்டினார். முதுகலையில் அவர் படைத்த ஆய்வுக் கட்டுரையை கார்டியன் பிரஸ் வெளியிட்டது. இவரது உளவியல் விரிவுரைகளும் தொகுக்கப்பட்டுத் தனி நூலானது.
1914-20 வரையான காலகட்டத்தில் ராதாகிருஷ்ணனின் கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரமாயின. தாகூரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். தாகூரின் கவிதைகளும் உரைநடையும் ராதாகிருஷ்ணனை ஆழமாகப் பாதித்தன. அவற்றிலிருந்த தத்துவக் கருத்துகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. தாகூரை ராதாகிருஷ்ணன் மீது ஆதிக்கம் செலுத்திய நம்பிக்கைக்குரிய ஆசான் என்றே சொல்லலாம்.
ஓர் அறிஞராக வளர்ச்சி கண்ட ராதாகிருஷ்ணன் 1921-ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையின் தலைவரானார். தென்னிந்தியாவில் இருந்து கல்கத்தா போயிருந்தார். முற்றிலும் புதிய சூழலில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி இந்தியத் தத்துவம் நூலின் இரண்டு பாகங்களை எழுதி முடித்தார். 1926-ல் அமெரிக்காவில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வரும்படி ராதாகிருஷ்ணனுக்கு அழைப்புவிடுத்ததன் பேரில் அங்கு சென்றுவந்தார்.
1931-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1939-ல் வாரணாசிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். மகாத்மா காந்தி கொலைசெய்யப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு வரை இந்தப் பதவியை வகித்தார். யுனெஸ்கோவில் இவரது பங்கு முக்கியமானது. 1946 முதல் 1951 வரை இதன் செயற்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக அங்கம்வகித்தார். பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுவுக்குத் தலைமை ஏற்ற ராதாகிருஷ்ணன் அதன் அறிக்கையில் ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளைத் தெரிவித்திருந்தார். இவை சுதந்திர இந்தியாவின் உயர்கல்விக்கு உத்வேகம் அளித்தன.
ஜவர்ஹர்லால் நேரு இவரை மாஸ்கோவுக்கான இந்திய தூதராக நியமித்தார். தொடர்ந்து இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவராகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். 1954-ல் பாரத ரத்னா விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார். 1967-ல் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் 1975 ஏப்ரல் 17-ல் காலமானார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
27 mins ago
சினிமா
48 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
55 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago