உலகைக் காப்பாற்ற தெருவுக்கு வந்த மாணவர்கள்

By யாழினி

உலகின் 125 நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ‘பருவநிலை அவசரநிலையை (Climate Emergency) அறிவிக்க வலியுறுத்தி மார்ச் 15 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஃப்ரைடேஸ் ஃபார் ஃயூச்சர்’ (Fridays for Future), ‘யூத் ஃபார் கிளைமேட்’ (Youth for Climate), ‘யூத் ஸ்ட்ரைக் ஃபார் க்ளைமேட்’ (Youth Strike for Climate) ஆகிய அமைப்புகள் மாணவர்களிடையே இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருந்தன.

‘ஃப்ரைடேஸ் ஃபார் ஃயூச்சர்’அமைப்பு உலகின் 2,052 நகரங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

உலகம் முழுவதும் பருவநிலை அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டும், பருவநிலை மாற்றத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், 16 வயதில் வாக்குரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் தார்மிகக் குரல்கள்

ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, நியூசிலாந்து என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். உலக அளவிலான இந்தப் போராட்டங்களுக்கு வித்திட்டவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது மாணவி க்ரெட்டா துன்பெர்க்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் பின்பற்றி கார்பன் உமிழ்வை ஸ்வீடன் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 2018 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பள்ளி வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் செய்யத் தொடங்கினார்.

அவரது போராட்டம் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கத் தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஐ.நா. வின் பருவநிலை மாற்றம் பற்றி சர்வதேசக் குழு (IPCC), பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு 12 ஆண்டுகால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறது.

உலக நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைந்தபட்சம் 50 சதவீதம் குறைத்தால் அது சாத்தியமாகும் என்றும் அந்தக் குழு அறிவுறுத்தியிருக்கிறது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்துமாறு மாணவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையில் பெரியவர்கள் போதுமான அளவுக்குச் செயல்படவில்லை என்று மாணவர்கள் தங்கள் கோபம், பயம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை இந்தப் போராட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மாணவர்களின் இந்தப் பருவநிலைப் போராட்டம் உலகத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாணவர்கள் கைகளில் ஏந்திய பதாகைகள் உலக மக்களை உலுக்கியிருக்கிறது. மாணவர்களின் இரண்டாவது உலகளாவிய பருவநிலைப் போராட்டம் மே 24 அன்று நடைபெறவிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

வர்த்தக உலகம்

33 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

59 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்