மக்கள் கூட்டத்தால் மதுரையின் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க படகுப்போக்குவரத்தும், குழந்தைகளை மகிழ்விக்க தெப்பக்குளத்தில் 4 இடங்களில் மியூசிக்கல் வாட்டர் ஃபவுன்டனும் அமைக்க சுற்றுலாத்துறை புதுத் திட்டம் தயாரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தால் தெப்பக்குளம் மதுரையின் மெரினா என்றழைக்கும் அளவுக்கு பொழுதுபோக்கு இடமாக உருவாகிவருகிறது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மதுரையின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. 1645ம் ஆண்டில் திருமலை நாயக்கர் மன்னரால் உருவாக்கப்பட்ட இந்த தெப்பக்குளம் 305 மீட்டர் நீளமும், 290 மீட்டர் அகலமும், 30 அடி ஆழமும் கொண்டது.
வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் இயல்பாகவே இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்காக நீர் வழிப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரைக்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள், தெப்பக்குளத்திற்கு வந்து செல்வார்கள்.
காலப்போக்கில் நீர் வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் பல இடங்களில் இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அதனால், தண்ணீரில்லாமல் தெப்பகுளம் நிரந்தரமாக வறட்சிக்கு இலக்கானதால் இந்தத் தலைமுறையினருக்கு அதன் பெருமை தெரியாமல் மங்கிப்போனது.
சுற்றுலாப்பயணிகள் தெப்பக்குளம் வருவது குறைந்தது. உள்ளூர் மக்கள் மட்டும், மாலை, காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்காக வந்து சென்றனர்.
மீனாட்சியம்மன் கோயில் தெப்ப உற்சவத்திற்கு மட்டும், வைகை ஆற்றில் வரும் தண்ணீரை ஜெனரேட்டரை கொண்டு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், 40 ஆண்டிற்குப் பிறகு வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுத்தது. ஆக்கிரமிப்பு கால்வாய்கள் மீட்கப்பட்டு தூர்ந்து போன கால்வாய்கள் சீரமைக்கபட்டு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டது.
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டதும் உள்ளூர் மக்கள் மட்டுமில்லாது வெளியூர்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் தற்போது தெப்பக்குளத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர். காலை, மாலை நேரங்களில் தெப்பக்குளத்தில் மக்கள் கூட்டம், சென்னை மெரினா கடற்கரை போல குவியத்தொடங்கியுள்ளது.
தற்போது சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க படகுப்போக்குவரத்தும், குழந்தைகளை மகிழ்விக்க மியூசிக்கல் வாட்டர் ஃபவுன்டனும் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெப்பக்குளத்தில் 4 மியூசிக்கல் வாட்டர் ஃபவுன்டன் அமைக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் நடந்து சென்று தெப்பக்குளத்தை ரசிக்க, ஃபேவர் பிளாக் நடைபாதைகள், அமர்ந்து ஒய்வெடுக்க இருக்கைள் அமைக்கப்பட உள்ளது. தெப்பக்குளத்தில் நான்கு பகுதியிலும் உள்ள சாலையின் மறுபகுதிகள் 10 அடி முதல் 20 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி, சாலை விசாலமாக்கப்பட உள்ளது.
மதுரையில் ராஜாஜி பூங்காவைவிட்டால் உள்ளூர் மக்களுக்கு பெரிய பொழுதுப்போக்குஇடம் இல்லை. அதனால், தெப்பக்குளத்தை சுற்றுலாத்துறை மேம்படுத்த உள்ளது. அதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து கொண்டிருக்கிறோம், ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
வணிகம்
24 mins ago
தமிழகம்
35 mins ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago