தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மே 28-ம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து, ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இதுதொடர்பாக ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது.
இக்குழுவின் அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது. ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததுடன், 3 வாரங்களில் ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து புதிய உத்தரவு வழங்க வேண்டும், ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், `தமிழக அரசின் அரசாணை செல்லாது எனக் கூறும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, `ஸ்டெர்லைட் ஆலையை ஜன.21-ம் தேதி வரை திறக்கக் கூடாது. அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என உத்தரவிட்டது.
இத்தடையை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகிய 2 மனுக்களையும், உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசின் மேல்முறையீடு தொடர்பாக பதிலளிக்க வேதாந்தா குழுமத்துக்கு உத்தரவிட்டும், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள நிபந்தனைகளை 3 வாரங்களுக்குள் நிறைவேற்றி, ஆலையை இயக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு விசாரணையின்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, “இந்த வழக்கில் நானும் மேல்முறையீடு செய்திருக்கிறேன். அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதன்மை வழக்கோடு வைகோவின் மேல்முறையீட்டையும் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிதூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆலையை உடனடியாக திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகுதான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப் போவதில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 mins ago
விளையாட்டு
6 mins ago
இந்தியா
10 mins ago
உலகம்
17 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago