குஜராத் தேர்தல் முடிவுகள்: வரலாற்று வெற்றியுடன் பாஜக மீண்டும் ஆட்சி; கடும் வீழ்ச்சி கண்ட காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக 157 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் சூழலில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும் இது அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை பெற்று அம்மாநிலத்தில் தனது தடம் பதித்து தேசிய அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது.மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. | இமாச்சல் நிலவரம் > இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் |

கடந்த 2017 தேர்தலுடன் ஒப்பிட்டால் பாஜக இம்முறை சுமார் 60 இடங்களைக் கூடுதலாக வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ 50-க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது. சுமார் 5 தொகுதிகள் என்ற அளவில் ஆம் ஆத்மி தனது வெற்றிக் கணக்கை குஜராத் மண்ணில் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. வெற்றி - முன்னிலை நிலவரம்:

கட்சிகள் தொகுதிகள்
பாஜக 157
காங்கிரஸ் 17
ஆம் ஆத்மி 5
பிற 3

இதனிடையே, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவியேற்பார் என பாஜக அறிவித்துள்ளது. > முழு விவரம்: டிச.12-ல் குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் பூபேந்திர படேல்

ஆம் ஆத்மி நிலை: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது வெற்றிக் கணக்கை துவங்கியுள்ளது. “5 ஆண்டுகள் எங்களுக்குக் கொடுங்கள், நாங்கள் எங்களை நிரூபிக்காவிட்டால் எங்களைப் புறக்கணியுங்கள்” என்ற கோரிக்கையோடு களம் கண்டது ஆம் ஆத்மி. ஆனால், 25 ஆண்டுகள் ஆட்சி செலுத்தி ஆலமரம் போல் அசைக்க முடியாத பாஜகவை எதிர்த்து சமாளிக்குமா ஆம் ஆத்மி? இல்லை, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தடம் பதிக்காமல் திரும்புமா என்ற விவாதங்கள் கூட நடைபெற்றன. ஆனால், ஆம் ஆத்மி கட்சியோ கருத்துக் கணிப்புகள், விவாதங்களை எல்லாம் பொய்யாக்கி தடம் பதித்துள்ளது. | வாசிக்க > குஜராத்தில் கணக்கைத் தொடங்கிய ஆம் ஆத்மி: தேசிய அரசியலில் தடம் பதிக்கிறதா?

ராஜ்நாத் கருத்து: பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்: ராஜ்நாத் சிங்

ஹர்திக் படேல் கருத்து: “தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களால் அரசியலில் வெற்றி பெற முடியாது; நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல முடியாது. ராகுல் காந்தி இதற்கு ஓர் உதாரணம்" என்று ஹர்த்திக் படேல் கருத்து தெரிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க > மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுபவர்கள் குஜராத்தில் வெற்றி பெற முடியாது: ஹர்திக் படேல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்தப்படி ஆளும் பாஜகவுக்கு சாதகமாக முடிவுகள் சென்று கொண்டிருக்கிறது.

2002க்குப் பின்னர் பாஜகவின் மெகா வெற்றி: கடந்த 2017 தேர்தல் பாஜகவுக்கு க்ளீன் ஸ்வீப் என்று சொல்லும் அளவிற்கு அமையவில்லை. இதுவரை குஜராத் அரசியல் வரலாற்றில் பாஜகவின் கோல்டன் பீரியட் என்றால் அது 2002ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான். ஆனால், இந்தத் தேர்தலில் தனது சொந்த வரலாற்றை முறியடித்த புதிய சகாப்தத்தை எழுத தயாராகிக் கொண்டிருக்கிறது பாஜக.

காங்கிரஸ் 1985ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் குஜராத்தில் தேய்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2017 ல் தேர்தலில் காங்கிரஸ் சற்றே தன்னை வலுப்படுத்தி மேலே எழுந்தது. ஆனால், அந்த வலிமை நீடிக்கவில்லை காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவினர். இந்தத் தேர்தலில் அதுவும் சரிந்து 20 தொகுதிகளையாவது எட்ட திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

மங்காத மோடி அலை: பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கூறின. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெற்றி என்பது எங்களுக்குத் தெரியும், வரலாற்று வெற்றிக்காகவே காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது போல் குஜராத்தில் பாஜக வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக பலகட்டப் பிரச்சாரங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் என்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கான பலன் கிடைத்துள்ளது. 'நான் உருவாக்கிய குஜராத்' என்று அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி மோடி அலை மங்கவில்லை. இன்னும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவின் முகமாக தாமே இருப்பேன் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்