இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் | ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் | ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்
Updated on
2 min read

ஷிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த சூழலில் தற்போது காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றியை பதிவு செய்து ஆட்சியைக் கைப்பற்றும் சூழலில் உள்ளது. பாஜக 25 இடங்களையும் வசப்படுத்தும் நிலையில் உள்ளது. ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. பிற கட்சிகளும், சுயேட்சைகளும் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 35 இடங்களில் வெற்றி தேவை. ஆளும் பாஜக பின்னடவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் |

2017 தேர்தலுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் 15க்கும் மேற்பட்ட இடங்களை கூடுதலாக வசப்படுத்தும் நிலையிலும், பாஜக 16 இடங்களை இழக்கும் நிலையிலும் உள்ளன. இங்கும் களம் கண்ட ஆம் ஆத்மி பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. வெற்றி / முன்னிலை நிலவரம்:

கட்சிகள் தொகுதிகள்
காங்கிரஸ் 40
பாஜக 25
பிற 3

காங்கிரஸ் திட்டம்: காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் அவர்களை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பிரியங்கா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏக்கள் கட்சித் தாவலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. | வாசிக்க > இமாச்சல்: வெற்றிச் சான்றிதழ் பெற்ற கையோடு எம்.எல்.ஏ.க்களை சத்தீஸ்கர் அழைத்துச் செல்ல காங்கிரஸ் திட்டம்

ஏன் அவசியம்? - தேசிய கட்சியாகவே இருந்தாலும் கூட ஒரு கட்சி தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தால் அதுவும் தொடர்ந்து இழந்துகொண்டே இருந்தால் அது அக்கட்சியின் முடிவுரையை எழுதிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க இயலாது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்கள் என அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் காங்கிரஸுக்கு சிறிய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றியை உறுதி செய்வது மிக மிக அவசியமானதாக இருக்கிறது. | விரிவாக வாசிக்க > இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸுக்கு ஏன் அவ்வளவு அவசியம்?

68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்நிலையில் காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. கருத்துக் கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறின. ஒருசில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றன.ஆரம்பக்கட்ட வாக்கு நிலவரத்தின்படி காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்தன. ஆனால் தற்போது காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

பிரச்சாரத்தில் அசத்திய பாஜக, காங்கிரஸ்: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. அங்கு மீண்டும் ஆட்சியை அமைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜகவின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in