புதுடெல்லி: டெல்லியில் கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் வைத்து அப்புறப்படுத்திய மனைவியும், அதற்கு உடந்தையாக இருந்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம்பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்த அஃப்தாப் என்ற இளைஞர் கொலை செய்து பின்னர் உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி அதனை ஃப்ரிட்ஜில் தேக்கிவைத்து அவ்வப்போது அவற்றை நாய்களுக்கு வீசியெறிந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே விலகாத நிலையில், அதே பாணியில் கொலை செய்து உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அப்புறப்படுத்திய சம்பவம் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவமும் டெல்லியில் தான் நடந்துள்ளது.
கிழக்கு டெல்லியில் நடந்த சம்பவத்தை போலீஸார் சிபிஐ வசம் ஒப்படைக்க, கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின்னர் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷ்ரத்தா வழக்கில் மகளை காணவில்லை என்று தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த வழக்கில் எந்தவிதமான காணவில்லை புகாரும் பதிவாகாததால், கொலையான நபரின் அடையாளத்தைக் கண்டறிவதே பெரிய சவாலாக இருந்துள்ளது. சிக்கலான வழக்கில் துப்பு துலங்கியது எப்படி என போலீஸார் விவரித்துள்ளனர்.
தாயும், மகனும் கைது: இச்சம்பவம் தொடர்பாக டெல்லி க்ரைம் பிரிவு உதவி கமிஷனர் அமித் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், "இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்துள்ளது. ஜூன் 5-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் சில மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. பின்னர் மூன்று நாட்கள் கழித்து இரண்டு கால்கள், இரண்டு தொடைகள், ஒரு முழங்கை, மண்டை ஓடு கிடைத்தன. இதனையடுத்து வழக்கு பதிவு செய்தோம். முதலில் அந்த உடல் யாருடையது எனக் கண்டறியும் பணியை மேற்கொண்டோம். நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் அது அஞ்சான் தாஸ் என்பவரின் உடல் என்பது தெரியவந்தது.
பின்னர் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாங்கள் சிசிடிவி கேமரா ஆதாரங்களைக் கொண்டு வீடுவீடாக ஆய்வு செய்து குற்றவாளிகளை நெருங்கினோம். குறிப்பிட்ட ஒரு சிசிடிவி காட்சியில் ஓர் இளைஞரும், ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் கையில் பையுடன் செல்வது பதிவாகியிருந்தது. அது சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதன்படி விசாரணையை தொடங்கினோம். எங்கள் சந்தேகம் சரியாகவே இருந்தது. அதன்பேரில் வீடுவீடாக ஆய்வு செய்து அஞ்சானின் மனைவி, மகனை கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன.
மே 30-ஆம் தேதி இரவு தாயும், மகனும் சேர்ந்து மதுவில் தூக்க மாத்திரை கலந்து அஞ்சானை அருந்தச் செய்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் முழுவதும் உடலில் இருந்து வெளியேறுவதற்காக ஒருநாள் முழுவதும் உடலை வீட்டினுள் வைத்திருக்கின்றனர். பின்னர் உடலை 10 துண்டுகளாக வெட்டியுள்ளனர். இதுவரை எங்களுக்கு 10 உடற்பாகங்கள் கிடைத்துள்ளன.
கொலையில் ஈடுபட்ட பூனம் கடந்த 2017-ஆம் ஆண்டு அஞ்சானை திருமணம் செய்துள்ளார். 2016-ல் அவரது கணவர் மறைந்துள்ளார். அதன் பின்னர் அஞ்சானை திருமணம் செய்திருக்கிறார். அஞ்சானுக்கு ஏற்கெனவே பிஹாரில் ஒரு பெண்ணுடன் திருமணமாகி 8 குழந்தைகள் இருந்துள்ளன. இந்நிலையில், அஞ்சான் சம்பாத்தியம் ஏதுமின்றி வீட்டில் சண்டையிட்டவாறே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் தன் மகனுடன் இணைந்து கொலை செய்து உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் மறைத்துவிட்டு பின்னர் அதனை அப்புறப்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
34 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago