புதுடெல்லி: தென்பெண்ணை நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே "யர்கோல்" என்னுமிடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த 2019-ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் மத்திய அரசை அணுக உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க தாமதமாவதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழககு தொடரப்பட்டது.
அதில், கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும், உரிய தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கவும், நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கு விசாரணையின்போது, "நடுவர் மன்றம் அமைப்பது குறித்து மத்திய நீர் ஆணைய குழு கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளதாக தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக தரப்பில், "இந்த விவகாரம் தொடர்பாக, சமரச குழு ஏற்படுத்தி அந்த குழு மூலம் தீர்வுகாண வேண்டும்" என்று கோரப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில், "சமரச குழு மூலம் தீர்வு காண்பது என்பது முடிவுக்கு வரவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைத்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதுவரை ஏன் நடுவர் மன்றம் அமைக்கவில்லை? வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அது குறித்து சிந்திப்பீர்களா?" என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, "இந்த நதிநீர் பங்கீடு விவகாரத்தில் 2 முறை மட்டுமே சமரச குழு கூடியது. அதிலும் முடிவு எட்டப்படவில்லை. எனவே நடுவர் மன்றம்தான் தீர்வு. அதனை விரைந்து அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு வழக்கறிஞர், "சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனுமதிக்க வேண்டும்" என்று வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நான்கு வாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்துகொண்டு வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
வர்த்தக உலகம்
27 mins ago
தமிழகம்
53 mins ago
சினிமா
48 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago