'அவர்கள் கோபமாக இருக்கிறார்கள்; என்வசம் ஏதுமில்லை' - ராஜஸ்தான் அரசியல் சர்ச்சையில் கைவிரித்த கெலாட்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: கோவா மாநில காங்கிரஸில் அதிரடிகள் அரங்கேறி முடித்த நிலையில் இப்போது ராஜஸ்தான் காங்கிரஸில் பூகம்பம் கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைவராக தேர்வானாலும் முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். ஆனால், இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால் ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கெலாட் ஆதரவாளர்கள் என கருதப்படும் சுமார் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

என்ன சொல்கிறார் கெலாட்? இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் முதல்வர் அசோக் கெலாட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கெலாட் எம்எல்ஏ.க்கள் கோபமாக இருக்கின்றனர். எனது கைகளில் எதுவும் இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், கேசி வேணுகோபால் இது போன்ற உரையாடல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார். விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட்

பிடிவாதம் ஏன்? இரட்டைத் தலைமை விவகாரத்தை கெலாட் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவி பார்ட் டைமாக பார்க்கும் வேலை அல்ல கெலாட்டுக்கு முதல்வர் பதவி முக்கியம் என்றால் அவர் அதில் மட்டுமே தொடரட்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குரல்கள் எழும்பியுள்ளன. ஆனால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பதாக இல்லை கெலாட். அதுவும் 2020 வெறும் 17 எம்எல்ஏக்களை கையில் வைத்துக் கொண்டு தனது ஆட்சியை கவிழ்க்க முயன்ற சச்சின் பைலட்டிடன் முதல்வர் பதவியை தாரைவார்க்க கெலாட் தயாராக இல்லை. சச்சின் பைலட் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதாலேயே அவர் துணிச்சலுடன் கெலாட்டை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒற்றுமை ஓங்கட்டும்: பாரத் ஜோடோ என்று ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சூழலில் கோவா காங்கிரஸில் பிளவு, ராஜாஸ்தான் காங்கிரஸில் சலசலப்பு என்ற சூழல் பாஜகவினர் விமர்சிக்க தோதான களமாக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறட்டும் கட்சிக்குள் ஒற்றுமை ஓங்கட்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அசோக் கெலாட் இரண்டு தலைமை விவகாரத்தில் மூழ்கியிருக்க சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பதவிக்கான வேட்புமனுக்களைப் பெற்று அடுத்தக்கட்ட நகர்வு நோக்கி முன்னேறியுள்ளார்.

அடுத்தது என்ன? 'ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு' (one post for one person) என்ற கட்சியின் கொள்கையை எடுத்துரைக்க காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாகேன் ஆகியோர் நேற்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை அவரது வீட்டில் சந்தித்த நிலையில் இவ்விவகாரத்தில் இன்று மதியம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அக்டோபர் 19ஆம் தேதிக்கு முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் பதவி குறித்து எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக கட்சி மேலிடத்திலிருந்து வெளியாகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கெலாட் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

30 mins ago

க்ரைம்

34 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்