காக்கிநாடா: ஆந்திர மாநிலம், காக்கிநாடா கொண்டைய்யபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (23). இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினரான உதயபாஸ்கரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் கார் ஓட்டுநர் பணியிலிருந்து விலகி வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் எம்எல்சி உதயபாஸ்கர் வந்து ஓட்டுநர் சுப்ரமணியத்தை தனது காரில் அழைத்து சென்றார். ஆனால், அன்றிரவு 1.30 மணிக்கு சாலை விபத்தில் சுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி, காரில் அவரது சடலத்தை எடுத்து வந்து எம்எல்சி உதயபாஸ்கர் சுப்ரமணியத்தின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரமணியத்தின் மனைவி அபர்ணா மற்றும் பெற்றோர் சடலத்தை வாங்க மறுத்து, என்ன நடந்தது என சரமாரியாக கேள்விகேட்டனர். இதனால், காரை அங்கேயே விட்டு விட்டு, உதயபாஸ்கர் சென்றுவிட்டார். இது தொடர்பாக காக்கிநாடா போலீஸ் நிலையத்தில் அபர்ணா மற்றும் சுப்ரமணியத்தின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனால், இந்த வழக்கை மர்மச்சாவு என போலீஸார் பதிவு செய்தனர். சுப்ரமணியத்தின் சடலத்தை கைப்பற்றி காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக எம்எல்சி உதயபாஸ்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சர்பவரம் எனும் இடத்தில் நடந்த சாலைவிபத்தில் சுப்ரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை நான் தான் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுப்ரமணியம் இறந்து விட்டதாக கூறியதால், சடலத்தை நான் அவரின் மனைவி, பெற்றோரிடம் ஒப்படைத்தேன் என்று தெரிவித்தார்.
எம்எல்சி உதயபாஸ்கர் கூறியதன்பேரில் போலீஸார் விபத்து நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசீலித்தனர். அப்போது அங்கு அப்படி ஒரு விபத்தும் நடக்கவில்லை என்பது ஊர்ஜிதமானது.
இதனிடையே சுப்ரமணியத்தை எம்எல்சி-தான் கொலை செய்தார் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் தலித் அமைப்பினர் பலர் காக்கிநாடாவில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
இதனிடையே உரிய நியாயம் வழங்குவதாக உறுதி அளித்த போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சனிக்கிழமை சுப்ரமணியத்தின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அன்றே உடலும் புதைக்கப்பட்டது. ஆனால், தலைமறைவான எம்எல்சி உதய பாஸ்கரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இறந்து போன சுப்ரமணியத்தின் குடும்பத்துக்கு அரசு ரூ. 1 கோடி நிதி உதவி செய்ய வேண்டுமெனவும் தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், காக்கிநாடா போலீஸில் நேற்று எம்எல்சி உதயபாஸ்கர் சரண் அடைந்தார் என போலீஸார் உறுதிப்படுத்தினர். மேலும், இந்த கொலையை அவர்தான் செய்தார் எனவும், சில சொந்த காரணங்களுக்காக சுப்ரமணியத்தை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், தொடர்ந்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே சினிமா பாணிபோல் கடத்தி கொலை செய்தால் மக்களுக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள் என்று இறந்துபோன சுப்ரமணியத்தின் பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர். இச்சம்பவம் முதல்வர் ஜெகனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
16 mins ago
க்ரைம்
20 mins ago
இந்தியா
18 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago