சென்னை ஐஐடி - காத்மாண்டு பல்கலை. இடையே 2 ஒப்பந்தங்கள்: பிரதமரின் நேபாள பயணத்தின்போது கையெழுத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காத்மாண்டு பல்கலைகழகம் - சென்னை ஐஐடி இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடியின் நேபாள பயணத்தின்போது இரு நாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை நேபாளத்திற்குச் சென்றார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரம்:

> புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா - காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா - காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம் (முதுநிலை அளவில் கூட்டு பட்டப்படிப்பு திட்டத்திற்காக).

> அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்.

மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி...

முன்னதாக, நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவருடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும் அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபாவும் சென்றிருந்தனர். கோயில் வளாகத்தின் உட்பகுதியில் உள்ள, பகவான் புத்தரின் மிகச் சரியான பிறப்பிடம் என்பதைச் சுட்டிக்காட்டும் குறியீட்டுக் கல்லுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜையில் பங்கேற்றனர். ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அசோகர் ஸ்தூபி அருகே இரு பிரதமர்களும் விளக்குகள் ஏற்றி வைத்தனர். இந்தத் தூண் கி.மு. 249-ல் அசோக சக்கரவர்த்தியால் நிறுவப்பட்டது. பகவான் புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக லும்பினியில் இது உள்ளது. இதன்பிறகு புத்தகயாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 2014-ல் லும்பினிக்குப் பிரதமர் மோடியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுக்கு இரு பிரதமர்களும் நீர் வார்த்தனர். ஆலயத்தின் வருகையாளர் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர்.

அதே போல, நேபாளத்தின் லும்பினியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் தியான மண்டபத்தில் நடைபெற்ற 2566 வது புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும், அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபாவும் கலந்து கொண்டனர். விழாவில் நேபாளத்தின் கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், லும்பினி வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவருமான பிரேம் பகதூர் ஆலே உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் புத்த துறவிகள், புத்தமத அறிஞர்கள், சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட 2500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் இரு நாட்டு பிரதமர்களும் உரையாற்றினர்.

லும்பினியில் உள்ள லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜையை நேபாள பிரதமர்ஷேர் பகதூர் தூபாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.

மார்ச் 2022 இல் சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை, சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கு ஒதுக்கியுள்ள இடத்தில், புதுடெல்லியின் சர்வதேச புத்த கூட்டமைப்பால் இந்த மையம் அமைக்கப்படும்.

தேராவாடா, மஹாயானா மற்றும் வஜ்ராயானா ஆகிய மூன்று முக்கிய புத்த பாரம்பரியங்களைச் சேர்ந்து துறவிகளால் பூமிபூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு, மையத்தின் மாதிரியை இரு நாடுகளின் பிரதமர்களும் திறந்து வைத்தனர்.

புத்த ஆன்மிக அம்சங்களை உலகம் முழுவதும் உள்ள யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் பெறுவதற்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை, கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்த மையம் வழங்கும். நவீன கட்டிடமாக, எரிசக்தி, தண்ணீர் மற்றும் கழிவுகளைக் கையாள்வதில் நிகர பூஜ்ஜிய தன்மை வாய்ந்ததாக விளங்குவதுடன், பிரார்த்தனை அரங்குகள், தியான மையங்கள், நூலகம், கண்காட்சி அரங்கம், உணவகம், அலுவலகம் மற்றும் இதர வசதிகளையும் இந்த மையம் உள்ளடக்கியிருக்கும்.

பார்க்க > நேபாளத்தில் பிரதமர் மோடி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்