பெகாசஸ் ஒட்டுக்கேட்பைப் பற்றிக் கவலைப்படாத ஒரே நாடு இந்தியாதான்: ப.சிதம்பரம் விமர்சனம்

By பிடிஐ

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே நாடு இந்தியாதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இதற்கிடையே கடந்த 22-ம் தேதி இஸ்ரேலியப் பிரதமர் நாப்தலி பெனட்டை தொடர்பு கொண்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் பேசியுள்ளார். அப்போது, தன்னுடைய செல்போனை மொராக்கோ பாதுகாப்புப்படைகள் ஒட்டுக்கேட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன், அவர்கள் பெகாசஸ் செயலியைப் பயன்படுத்தினார்களா என்று கேட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை இஸ்ரேல் அரசு தீவிரமாக எடுத்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பெகாசஸ் உளவு செயலி குறித்த முழு விவரங்களையும் கேட்டுள்ளார், பிரான்ஸில் செல்போன்கள், குறிப்பாக அதிபரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக் குறித்தும் பேசியுள்ளார்.

அதற்கு இஸ்ரேலிய பிரதமர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விரைவில் தெரிவிக்கிறேன் என உறுதியளித்துள்ளார். ஆனால், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்தியாவில்தான் இருக்கிறது.

ஏனென்றால், ஒட்டுக்கேட்பு குறித்த முழுமையான தகவல்களையும் மத்திய அரசுஅறிந்துள்ளதால், வேறு எந்தத் தகவலையும் இஸ்ரேலிடமும், என்எஸ்ஓ அமைப்பிடமும் கேட்கத் தேவையி்ல்லை என்று எண்ணுகிறதா” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ப.சிதம்பரம் நேற்று பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பெகாசஸ் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது, யாரேனும் கண்காணிக்கப்பட்டார்களா என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சில பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிப்பு செய்தன என்று கூறினாலும் அந்த ஏஜென்சிக்கான அமைச்சர் பிரதமர் மோடிதான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் தன்னுடைய துறையில் நடப்பது பற்றித் தெரியும். பிரதமர் மோடிக்கு அனைத்து துறைகளிலும் நடப்பது தெரியும். ஆதலால், பிரதமர் மோடி, தாமாக முன்வந்து, பெகாசஸ் விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

10 mins ago

வாழ்வியல்

34 mins ago

தமிழகம்

50 mins ago

ஆன்மிகம்

8 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்