திருமணத்தின்போது பெற்றோரே தாமாக முன்வந்து வரதட்சணையை வாரிக் கொடுத்தாலும் பெண்கள் அதனை ஏற்கக் கூடாது. ஒருமுறை குடும்ப வன்முறை நிகழ்ந்துவிட்டாலே குடும்ப ஒழுங்கின் எல்லை மீறப்பட்டதை பெண்கள் உணர வேண்டும், அதன்பின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேரள போலீஸ் ஐஜி ஹர்ஷிதா அட்டலூரி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், மேட்ரிமோனியல் தளம் மூலம் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்துகொண்டவர் விஸ்மயா. 22 வயதான இவர் இறுதியாண்டு ஆயுர்வேத மருத்துவப் படிப்பு படித்து வந்தார்.
வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான இவர் ஜூன் 21ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். விஸ்மயாவின் கணவர் கிரண் தற்போது காவல்துறையில் சரணடைந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "தற்போதுள்ள திருமண நடைமுறைகளில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. திருமணம் என்பதை பெற்றோர் தங்களின் சொத்து மதிப்பின் பகட்டைக் காட்டும் கண்காட்சி போன்று நடத்தக்கூடாது. வரதட்சணையை ஊக்குவிக்கும் செயல்கள் நம் பெண் பிள்ளைகளை நாமே ஒரு பண்டத்துக்கு நிகராக தரத்தை குறைப்பதற்கு சமம். பெண் பிள்ளைகள் பண்டமல்ல அவர்கள் மனிதர்கள். அவர்களை இன்னும் கவுரவமாக நடத்த வேண்டும்" என ட்வீட் செய்திருந்தார்.
தற்போது கேரள காவல்துறை சட்டம் ஒழுங்கு ஐஜி ஹர்ஷிதா அட்டலூரியும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர், "வரதட்சணைக் கேட்பது குற்றம். பெண்கள் இதில் ஒரு நிலையான கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரே முன்வந்து வரதட்சணையாக நகையும், பொருளும், பணமும் கொடுத்தாலும் கூட அதனை அவர்கள் ஏற்கக்கூடாது. பெண்களுக்கு கல்விதான் முக்கியம். பரிசுப்பொருட்கள் அல்ல.
அதேபோல், திருமண உறவுக்குள் சென்ற பின்னர் பிரச்சினைகள் ஏற்படும்போது பெண்கள் உதவி கேட்கத் தயங்குகின்றனர். குடும்ப வன்முறையை சகித்துக் கொள்ளும் 90% பெண்கள் வழக்குப்பதிவு செய்ய விரும்புவதில்லை. மாறாக தங்களைத் துன்புறுத்தும் கணவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ காவல்துறையால் எச்சரிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
இங்குதான் இளம் பெண்கள் தவறு செய்கின்றனர். எப்போது நீங்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறோர்களோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறீர்களோ அப்போதே எல்லை மீறப்பட்டுவிட்டது என்றே அர்த்தம். நீங்கள் முதலில் உங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் உடலை மதியுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago