சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்து நாங்கள் விசாரிக்கப் போவதில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

By எம்.சண்முகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் பெண்கள் நுழைவது குறித்து நாங்கள் விசாரிக்கப் போவதில்லை. விரிவான சட்ட உரிமைகள், நீதிமன்றத்தின் வரம்பு குறித்து மட்டுமே விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில், சபரிமலை வழக்கு மட்டுமின்றி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பெண்களுக்கு எதிராக உள்ள தடைகளை எதிர்த்தும், முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழையும் உரிமை, பார்சி பெண்கள் வேறு மதத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு விதிக்கப்படும் தடை, தாவூதி போரா பெண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் சடங்குகள், நிக்கா ஹலாலா உள்ளிட்டவை குறித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் சட்டச்சிக்கல் அடங்கி இருப்பதால் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்குகள் மாற்றப்பட்டன. விசாரிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து உதவ வழக்கறிஞர்கள் கூடி பொதுக்கருத்தை எட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கறிஞர்களுக்குள் பொதுக்கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வாதிட்டனர். அப்போது தலைமை நீதிபதி, "சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவது குறித்து நாங்கள் விசாரிக்கப் போவதில்லை. அதில் ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதால், அதில் சீராய்வு வரம்பு அதிகாரம் மிகவும் குறுகியதாகும். ஆனால் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விரிவான சட்ட நுணுக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அதுகுறித்து மட்டுமே விசாரிக்க உள்ளோம்" என்றார்.

சபரிமலை வழக்குக்கு தொடர்பில்லாத பல மனுக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை விசாரிக்கக் கூடாது என்று சில வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது, "அரசியலமைப்பில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை, மதத்தை பின்பற்றும் சுதந்திரம், மத விஷயங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றையும், இதில் எந்த அளவுக்கு தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்பது பற்றி மட்டுமே நாங்கள் விசரிக்க உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

இதில் எந்தெந்த விஷயங்களில் வழக்கறிஞர்கள் எவ்வளவு நேரம் வாதிட வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து வரும் 6-ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் தெரிவிப்போம்" என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

சபரிமலை வழக்கு, மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்கான எல்லையை முடிவு செய்யும் வழக்காக மாறியிருப்பதால் இந்த வழக்கு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

42 mins ago

க்ரைம்

46 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்