5 ஆண்டுகளில் 2,600 வணிகக் கப்பல்களை கொள்ளையரிடம் இருந்து காப்பாற்றிய இந்திய கடற்படை

By செய்திப்பிரிவு

கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,600 வணிகக் கப்பல்களை கடல் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றி இந்திய கடற்படை சாதனை புரிந்துள்ளது என தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி (பொறுப்பு) கமாண்டர் அமர் கே.மகாதேவன் தெரிவித்தார்.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போரில் இந்திய கடற்படையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி ‘இந்திய கடற்படை தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடற்படை தினம், இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை இரவு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி (பொறுப்பு) கமாண்டர் அமர் கே. மகாதேவன் கூறியதாவது:

இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்புப் பணிகளுடன் கடல் போக்குவரத்தின்போது வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய கடல் எல்லை வழியே செல்லும் தேசிய மற்றும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க 39 கப்பல்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,600 வணிகக் கப்பல்கள், கடல் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.

தமிழக மீனவர் பாதுகாப்பு

தமிழக மீனவர்கள் என்றைக்குமே இந்திய கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டதில்லை. 1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்க சுதந்திரம் உண்டு.

இதை நாம் ஏற்றுக்கொண்டாலும், இலங்கை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மீன் இனப்பெருக்கப் பகுதியும் சில இடங்களில் மாறுபட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களும் அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும்.

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ராமநாதபுரத்தில் ஐ.என்.எஸ். பருந்து எனும் கடற்படை தளம் இயங்கி வருகிறது. இங்கு நவீன ஆயுத வசதிகளுடன் ரோந்துப் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்பெல்லாம் வடக்கு கடலோர பகுதிகளில் அயல்நாட்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தனர். தற்போது கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவர்கள் நுழைய முயற்சிப்பதால் அதற்கேற்றபடி பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கடற்படைக்குப் பயிற்சி அளிப்பது குறித்து கேட்டபோது, ‘‘அது இந்திய அரசின் முடிவு. அதில் கருத்து எதுவும் சொல்ல முடியாது’’ என்று கடற்படை அதிகாரி கூறினார். தூத்துக்குடியில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க கப்பல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்தவர்கள் கூலிப்படையினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்