இந்தியாவில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், நோயற்ற எருமைகளை உருவாக்கும் வகையிலும் அதன் மிகச்சிறந்த மரபணு கோர்வையை உருவாக்கி குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
உலக அளவில் 22 கோடியே 44 லட்சம் எருமை மாடுகள் இருக்கின்றன. இவற்றில் 21.9 கோடி எருமை மாடுகள் (97.58%) ஆசியாவிலேயே உள்ளன. இவற்றில் இந்தியாவில் மட்டும் 11.33 கோடி எருமைகள் உள்ளன. உலக அளவில் உள்ள எருமை மாடுகளின் எண்ணிக்கையில் இது 50.5 சதவீதம் ஆகும்.
எருமை மாடுகள், அதிகமான நோய் எதிர்க்கும் திறன் கொண்டவை. பசுக்களைக் ஒப்பிடுகையில், எருமை பாலில் அதிக கொழுப்பு சதவிகிதம் உள்ளது, எனவே அதிக நெய் உற்பத்தி செய்ய முடியும். பால் உற்பத்திக்கு வளரும் நாடுகளில் எருமைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.
அதிலும் இந்தியாவில் தனிச்சிறப்பு வாய்ந்த எருமைகளில் முரா இனம் குறிப்பிடத்தகுந்தது. அதிகஅளவு பால் தரும் இந்த எருமைகளின் விலையும் அதிகம். விவசாயிகளுக்கு அதிகமான பலன் தரும் வகையில் எருமை இனங்களை பெருக்குவதற்காக பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. அந்த வகையில் குஜராத் மாநிலம் ஆனந்த்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முரா இன எருமைகளின் பெற்றோர் வாரியாக மரபணுக்கள் கோர்வையை துல்லியமாக அறியும் முயற்சி நடந்து வந்தன. மிகவும் துல்லியமான முறையில் தனித்துவமாக, அதாவது தந்தை-தாய்-சந்ததி முக்கோண செயல்முறை (Trio binning) பயன்படுத்தி பெற்றோர் வாரியாக மரபணு கோர்வை பிரிக்கப்படுகிறது.
பால் உற்பத்தி அதிகரிக்க
பசு மாடுகளின் பால் உற்பத்தி அதிகரிக்க Induschip என்ற மரபணு சிப் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. எருமைகளின் மரபணு சிப்பை உருவாக்க, மரபணு கோர்வையை உருவாக்கும் முயற்சியில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
எருமைகளின் பால் உற்பத்தி அதிகரிக்க "NDDB_ABRO_Murrah" என்ற முழுமையான டி நோவோ மரபணு கோர்வை (de novo genome assembly) தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானிகள், சுதாகர் அனந்தசயனம் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
இந்திய எருமை இனங்கள் பால் உற்பத்தி அதிகரிக்க அதன் மரபணு தேர்வு (genomic selection) தேர்வை செய்ய இந்த மரபணு கோர்வை பயன்படுகிறது.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறியதாவது:
உலக டிஎன்ஏ தினமான கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தில் இந்தியாவின் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானிகளால் முரா இன எருமைகளின் மரபணு கோர்வைகள் (Genome Assemblies) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் மரபணு அடிப்படையில் சரியான மாட்டை இளவயதில் தேர்வு செய்து அதனை இனப்பெருக்கம் செய்விக்க முடியும்’’ எனத் தெரிவித்தனர்.
இந்திய எருமை இனங்கள் பால் உற்பத்தி அதிகரிக்க மற்றும் வேகமாக மரபணு சார்ந்த முன்னேற்றத்தை அடைவதற்க்கும், எருமை இனங்களில் மரபணு தேர்வு (genomic selection) திட்டத்தை செயல்படுத்துவதற்க்கும் இந்த மரபணுக் கோர்வை பயன்படுத்தப்படும் என தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திலீப் ரத் தெரிவித்துள்ளார்.
மரபியல் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் மைக்கேல் ஸ்காட்ஸ் இதுபற்றி கூறுகையில் ‘‘இது நிச்சயமாக உலகின் மதிப்புக்குரிய ஆதாரமாக இருக்கும்” என தெரிவித்தார். இந்த எருமை மரபணு கோர்வை உலகில் எருமை மரபணு ஆராய்ச்சி வளர்ச்சிக்கான இந்தியாவின் பங்களிப்பாகும்.
இந்த துல்லியமான மற்றும் வியத்தகு மரபணு கோர்வை உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் குழுவானது உலகின் சிறந்த மரபணு ஆராய்ச்சிக் குழுக்களின் நிலைக்கு உயர்ந்துள்ளனர் என தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது.
இந்திய விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, மாடுகளின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், தேசிய பால்வள திட்டம் மற்றும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (RGM) போன்ற திட்டங்களின் மூலம் மத்திய அரசு இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago