ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு முன்னதாக மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாளை (திங்கட்கிழமை) காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி ராமநாதபுரம் வருகிறார்.
திங்கட்கிழமை 11.30 மணியளவில் டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் ராகுல் காந்தி, பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் மூலமாக ராமநாதபுரம் வருகிறார்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 12.30 மணியளவில் உரையாற்றுகிறார். முன்னதாக மீனவ சமுதாயத்தினரைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய உள்ளார்.
இதுகுறித்து 'தி இந்து' செய்தியாளரிடம் மீனவப் பிரதியும் காங்கிரஸ் பிரமுகருமான ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறும்போது, " பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது தமிழகத்தில் 1950-களில் நார்வே நாட்டின் உதவியுடன் அறிமுகமானது 'டிராலர்’ எனும் விசைப்படகு மீன்பிடி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இந்தோ நார்வீஜியன் திட்டம் (Indo Norwegian Project) திட்டம் மூலம் உடல் உழைப்பைக் குறைத்து இயந்திர மீன்பிடியை அறிமுகப்படுத்தியதால் உள்ளுர் தேவைகளுக்கு மட்டும் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலவாணியை ஈட்டித் தந்தனர்.
மேலும், 1978ல் தமிழகத்துடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் வண்ணம் பாம்பன் சாலைப் பாலத்திற்கு இந்திரா காந்தி அடிக்கல் நாட்ட 1988 ஆம் ஆண்டு பாம்பன் பாலத்தை ராஜீவ் காந்தி அதனை திறந்து வைத்தார். இவ்வாறாக ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி என்ற மூன்று தலைமுறை பிரதமர்களின் தொலை நோக்குப் பார்வையினால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வில் வளம் சேர்த்தனர்.
இப்போது முதன் முதலாக ராகுல் காந்தி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு வருகை தந்து பிரச்சாரக் கூட்டத்திற்கு முன்னதாக மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தனது தேர்தல் அறிக்கையில் மத்திய அரசில் மீன்வளம் மற்றும் மீனவர் நல அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. அதனுடன் சேர்த்து மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மீனவ சமுதாயத்தை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும், வரி விதிப்புகளில் இருந்து விலக்கு அளித்து மீனவர்களுக்கான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மத்திய அரசின் அடக்க விலைக்கே வழங்க வேண்டும், படகுகளுக்கு இன்சூரன்ஸ், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தனுஸ்கோடி அருகே உள்ள மணல் தீடைப்பகுதி பகுதிகளை ஆழப்படுத்தி மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்க வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்டவை மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கைகளாக உள்ளன.
இவற்றை காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமானால் நிறைவேற்றித் தருவோம் என ராகுல் காந்தி, ராமநாதபுரம் பிரச்சாரத்தில் வாக்குறுதியளிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
11 hours ago