அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை - தரவரிசைப் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 பேர் பதிவு செய்தனர். அதில் 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியுள்ளனர். இவர்கள் மட்டுமே சேர்க்கை பெறமுடியும்.

இதற்கிடையே அரசு கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர் எண்ணிக்கை விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அதிகபட்சமாக சென்னை மாநில கல்லூரியில் மொத்தமுள்ள 1,140 இடங்களுக்கு 40,030 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி (34,743), சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி (29,260) மற்றும் ராணி மேரிக் கல்லூரியில் (24,256) விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக திருவாரூர் கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரியில் 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதேநேரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்தாண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டு 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 4.07 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். அதில் 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, கட்டணமும் செலுத்தினர். ஆனால், நடப்பாண்டு அதைவிட 53,952 விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளன. இது 18 சதவீதம் வரை சரிவாகும்.

விண்ணப்பம் எண்ணிக்கை குறைவு: குறிப்பாக சென்ற ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் 95 ஆயிரம் பேரும், ராணி மேரி கல்லூரியில் 46 ஆயிரம் பேரும் சேர்க்கைக்கு விண்ணப்பித்தனர். நடப்பாண்டு அந்த கல்லூரிகளில் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்களிடம் மீண்டும் ஆர்வம்
ஏற்பட்டுள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மறுபுறம் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் கடுமையான போட்டி நிலவுவதும், அங்கு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விண்ணப்பித்ததில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நேற்று வெளியிட்டது. இவற்றை கல்லூரிகள் http://www.tngasa.in/ எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அவற்றை சரிபார்த்து துறை வாரியாக தரவரிசைப் பட்டியலை கல்லூரிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

மேலும், தரவரிசையின் அடிப்படையில் மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து மே 29-ம்தேதி முதல் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி அளவில் நடைபெறும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

14 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்