சென்னை | இலவச யோகா பயிற்சி என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: யோகா மாஸ்டர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: இலவச யோகா பயிற்சி என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக யோகா மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோடம்பாக்கம் யுனைடெட்ட இந்தியா காலனி, முதலாவது பிரதான தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (57). யோகா ஆசிரியரான இவர், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்று கொடுத்து வந்தார்.

இந்நிலையில் சந்தானம், கடந்த 12-ஆம் தேதி முதல்17-ஆம் தேதி வரை சில பள்ளி மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுத்தார். அப்போது அந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு சந்தானம் பாலியல் தொல்லைகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை நல வாரியத்தில் புகார்

இதில், பாதிக்கப்பட்ட சில மாணவிகள், குழந்தைகள் நல வாரியத்தில் புகார் செய்தனர். இந்த புகார்களைப் பெற்ற குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் லலிதா இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தானம் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக சந்தானத்தை போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE