மின்வாரியத்தைக் குறை சொல்வதோ குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல என்று பிரசன்னா வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இது தொடர்பாக பிரசன்னா "இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.
பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தை அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. (மின்வாரிய அறிக்கையை முழுமையாக படிக்க: Click Here)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கையைத் தொடர்ந்து பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"உண்மைதான்! ரீடிங் எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான் , மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான் . அதே அளவு இதற்குமுன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்திவருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வதுபோல் நான்கு மாத கணக்கீட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான் எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என் ட்வீட்.
மின்வாரியத்தைக் குறை சொல்வதோ குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்த கவன ஈர்ப்பும் , அதன்மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப்பிரச்சினையில் மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம் செலுத்தத் தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள்.
நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும் அதையே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஊரடங்கு காலங்களில் மருத்துவ, காவல், சுகாதார துறைகள் போலவே மின்வாரிய ஊழியர்களும், அதிகாரிகளும் அயராது பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை நன்றியோடு பாராட்டவும் நான் மறக்கவில்லை. மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மனநோகச் செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன். மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்.
பிகு : என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான் செலுத்திவிட்டேன்"
இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
14 mins ago
க்ரைம்
18 mins ago
இந்தியா
16 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago