சமந்தாவுடன் காதல் முதல் திருமணம் வரை: மனம் திறந்த நாக சைதன்யா

By கார்த்திக் கிருஷ்ணா

சமந்தாவுடனான காதல் மலர்ந்தது, திருமணம் மற்றும் மதம் மாற்றம் சர்ச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நாக சைதன்யா

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமம்' படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. தெலுங்கிலும் 'ப்ரேமம்' என்ற பெயரிலேயே அக்டோபர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.

நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன், மடோனா செபஸ்டின், அனுபமா பரேமஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சந்து இயக்கி இருக்கிறார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்துள்ள பேட்டியில் சமந்தாவுடனான காதல் மலர்ந்தது எப்படி, சமந்தா மதம் மாறுகிறாரா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

சமந்தா மதம் மாறுகிறார் என்ற சர்ச்சைக்கு, "சமந்தா மதம் மாறவில்லை. இந்த போட்டோ எப்படி வந்ததென்று தெரியவில்லை. அப்பா ஒரு பூஜைக்கு அழைத்தார். எங்களுக்கு படப்பிடிப்பு இல்லை என்பதால் நாங்கள் சென்றோம். கலந்து கொண்டோம். அவ்வளவுதான்.

மதம் மாறுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான் எனக்கு விருப்பம். அனைவரையும் பொதுவாகவே பார்க்கிறேன். மதம், ஜாதி வைத்து யாரையும் பிரித்துப் பார்த்ததில்லை. நாம் அனைவரும் மனிதர்களே" என்று பதிலளித்துள்ளார்.

மேலும், சமந்தாவை ஏன் பிடித்தது என்பதற்கு, "அவர் மிகவும் வெளிப்படையானவர். நேர்மையானவர். மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடுவார். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படித்தான் காதல் ஆரம்பித்தது என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

உங்களுக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியதற்கு, "ஒரு சினிமாவை ஒப்புக்கொள்ளும் முன்பு அவர் எனக்கும், நான் அவருக்கும் சில யோசனைகளை சொல்லிக்கொள்வோம். அந்த சமயத்தில் அந்த சினிமா சார்ந்து ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வோம். நாங்கள் தேர்வு செய்யும் கதைகள் குறித்து சில கருத்து வேறுபாடுகள் வரும்.

யே மாய சேஸாவே (விண்ணைத்தாண்டி வருவாயா - தெலுங்கு) சமயத்தில் நாங்கள் நண்பர்கள் மட்டுமே. நீண்ட நாட்கள் அப்படித்தான் இருந்தோம். இருவரும் ஒரே சமயத்தில் இந்த துறைக்கு வந்தோம். படம் ஓடுகிறதோ, ஓடவில்லையோ, சந்தோஷமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆலோசனை கூறிக்கொள்வோம். அப்படியே ஒரு பிணைப்பு உருவானது.

எனது ஆதரவு எப்போது வேண்டுமோ நான் தருவேன், ஆலோசனை கூறுவேன். ஆனால் அவர் தனியாகவே பல சவால்களை சந்தித்துள்ளார். அவர் இன்று இருக்கும் நிலைக்கு அவரது தனிப்பட்ட கடின உழைப்பு மட்டுமே காரணம்.

திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பதை நிறுத்த மாட்டார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது கடின உழைப்பு அதிகம். எனக்கு ஒரு சினிமா பின்னணி இருக்கிறது. அவர்கள் உதவியுடன் தான் இந்தத் துறையில் நுழைந்தேன். அக்கினேனி, டக்குபாடி குடும்பங்களால் எனக்கு சினிமாவில் ஒரு தளம் கிடைத்தது. ஆனால் சமந்தா மாதிரியான நடிகர்கள் எந்த பின்னணியும் இல்லாமல் வருகிறார்கள். எப்படியாவது ஒரு இயக்குநர் தேர்வு செய்த பிறகே அவர்களுக்கு வாய்ப்பு என்ற ஒன்று கிடைக்கிறது. அது வலிகள் நிறைந்த ஒரு பயணம். அதிக உழைப்பு தேவைப்படும் பயணம். 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் உறுதியாக தீர்மானமாக இருக்க வேண்டும். ஒரு வாய்ப்புக்காக எவ்வளவோ பேர் முயற்ச்சிக்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு இடத்துக்கு வந்தவுடன், திருமணத்துக்குப் பிறகு அந்த கஷ்டத்தை எல்லாம் புறக்கணித்துவிட்டு நடிப்பதை மறந்துவிடு என சொல்லுவது பெரிய தவறு. எனவே நான் அப்படிச் சொல்ல மாட்டேன். அவர் எந்த வகையான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்தாலும் நான் அவருக்கு ஆதரவு அளிப்பேன். அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும், இன்னும் சிறக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, "அடுத்த வருடம் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். தேதி எதுவும் முடிவாகவில்லை” என்று பதிலளித்துள்ளார் நாக சைதன்யா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 secs ago

விளையாட்டு

23 mins ago

வேலை வாய்ப்பு

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்