வெனிசுலா: பூகம்ப இடிபாடுகளில் 8 நாட்கள் சிக்கிய நபர் 100 மணி நேரத்துக்கு பின் மீட்பு

வெனிசுலா: பூகம்ப இடிபாடுகளில் 8 நாட்கள் சிக்கிய நபர் 100 மணி நேரத்துக்கு பின் மீட்பு
Updated on
1 min read

கராகஸ்: வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்​தடுத்து ஏற்பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000-த்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை சுமார் 8 நாட்களுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் 100 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர்.

தென் ​அமெரிக்க கண்​டத்​தில் வெனிசுலா அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் யாராகுய் மாகாணம், சான்​பெலிப் நகரில் கடந்த 24-ம் தேதி மாலை 6 மணி அளவில் (இந்​திய நேரப்​படி வியாழக்​கிழமை அதிகாலை 3.35 மணி) சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதி​வானது.

அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்​பெரிய பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அலகில் 7.5 ஆகப் பதி​வானது. முதல் பூகம்​பம் ஏற்​பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் யுமரே நகர் அமைந்துள்​ளது. பூகம்​பம் காரணமாக அந்த நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள மக்களின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 10,000 பேர் மாயமாகி உள்ளனர்.

பூகம்பம் ஏற்பட்டு சுமார் ஒரு வார காலம் கடந்த நிலையில் அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வெனிசுலாவின் லா குய்​ரா நகரில் இயங்கி வந்த ஷாப்பிங் சென்டரில் காவலாளியாக பணியாற்றி வந்த 43 வயதான கில் ஃப்ளோரஸ், பூகம்ப இடிபாடுகளில் சிக்கினார். நிலநடுக்கம் அதிர்வுகள் ஏற்பட்ட போது காவலாளிக்கான அறையில் அவர் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அதன் இடிபாடுகளில் அவர் சிக்கினார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரோடு இடிபாடுகளில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு குழுவினர், அவரை போராடி மீட்டுள்ளனர். மிகவும் சவாலான இந்த பணியின் போது, தன்னை மீட்கும் வரையில் தான் உயிரோடு இருப்பது குறித்து தனது மனைவிக்கு தெரிவிக்க வேண்டாம் என கில் ஃப்ளோரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சூழலில் அவரை பத்திரமாக மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர் சிக்கிய பகுதியில் கட்டிட இடிபாடுகள் அதிகம் இருந்த காரணத்தால் மீட்புப் பணி சற்று தாமதமாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெனிசுலா: பூகம்ப இடிபாடுகளில் 8 நாட்கள் சிக்கிய நபர் 100 மணி நேரத்துக்கு பின் மீட்பு
மறைந்த டியோகோ ஜோட்டாவுக்கு வெற்றியை சமர்ப்பித்த போர்ச்சுகல் அணியினர் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in