

வாஷிங்டன்: ஈரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பொதுமக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா - ஈரான் இடையே ஜெனிவாவில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை என்றால், ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அருகே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது துணைப் போர்க் கப்பல்களுடன் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்ஃபோர்ட் போர்க் கப்பலும் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா போர்த் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதியில் குவித்துள்ளது. இது மிகப் பெரிய தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருவது போல் தெரிகிறது. இந்த தாக்குதல் சில வாரங்கள் தொடரலாம் எனவும் கூறப்படுகிறது.