

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க
புதுடெல்லி: இலங்கையில் அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவர் கூறியதாவது: டிஜிபோத்தி விமானப் படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 2 அமெரிக்க போர் விமானங்களை இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அமெரிக்க அரசு அனுமதி கோரியது. இதற்கு அனுமதி மறுத்துவிட்டோம்.
இதன்பிறகு கடந்த 9 முதல் 13-ம் தேதி வரையிலான காலத்தில் ஈரான் கடற்படையின் 3 கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரப்பட்டது. நமது நாட்டின் நடுநிலையை கருத்தில் கொண்டு அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் ஈரான் கப்பல் கடலில் மூழ்கியது. மனிதாபிமான அடிப்படையில் அந்த கப்பலில் இருந்து 84 பேரை காப்பாற்றினோம். 32 பேரின் உடல்களை மீட்டோம். மேலும் மனிதாபிமான அடிப்படையில் ஈரானின் ஒரு கப்பலுக்கு மட்டும் கொழும்பில் தஞ்சம் அளித்தோம்.
அமெரிக்கா, ஈரானுடன் இலங்கைக்கு நட்புறவு நீடிக்கிறது. அமெரிக்கா, ஈரான் போரால் இலங்கையில் எரிபொருள், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதருமான செர்ஜியோ கோர் கொழும்பில் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துப் பேசினார். அப்போது போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமெரிக்க தூதரிடம் இலங்கை அதிபர் விரிவாக எடுத்துரைத்தார். அதேநேரம், போரில் இலங்கையின் நிலைப்பாட்டை அமெரிக்க தூதர் கேட்டறிந்தார்.