

மாஸ்கோ: உக்ரைன் ட்ரோன்கள் மூலம் நடத்தும் தாக்குதலால் ரஷ்யாவுக்கு தினமும் ரூ.926 கோடி இழப்பு ஏற்படுகிறது.
ரஷ்யாவுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் தொழில் கச்சா எண்ணெய் விற்பனையும் முக்கியமானது. அதனால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகள், துறைமுகங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவில் உள்ள 10 பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் டுவாப்சி சுத்திகரிப்பு நிலையம், ரோஸ்நெஃப்ட் சுத்திகரிப்பு மையம் ஆகியவையும் அடங்கும். இங்கு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்துவதால் தீ விபத்துகள் ஏற்பட்டு அருகில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் ரஷ்யாவின் பிரிம்மோர்ஸ்க், உஸ்ட்-லுகா, ஷேஸ்க்ஹரிஸ் மற்றும் டுவாப்சி ஆகிய பகுதிகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 8,80,000 பேரல்கள் குறைந்து, நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ.926 கோடி) இழப்பு ஏற்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.