

புதுடெல்லி: ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
போரால் பாதிக்கப்பட்ட காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐ.நா. சபை பயனற்றது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த சூழலில் ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அவர் தொடங்கி உள்ளார்.
புதிய அமைப்பின் தலைவராக அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்று உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அப்போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ரோவன், இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியேல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய சர்வதேச அமைப்பில் உலக நாடுகள் நிரந்தர உறுப்பினராக சேரலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த புதிய அமைப்பு காசாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும். இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் ‘‘போர்டு ஆப் பீஸ்’’ அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி டேனியல் போர்டி கூறும்போது, “உலக விவகாரங்களில் தலையிட அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறுக்கு வழி’’ என்று குற்றம் சாட்டினார்.