

புதுடெல்லி: ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்டது.
ஓமன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்தது. இந்திய மாலுமிகள் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள், எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றதால் அவற்றின் மீது அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தி முடக்கியது. இதில் ஒரு கப்பலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஓமன் கடல் பகுதியில் இருந்து 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்வி விராட் 1 என்ற இந்திய கப்பலில் இன்ஜின் பழுதடைந்து மூழ்கத் தொடங்கியது. இதுகுறித்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படை ஓமன் அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படைக்கு தகவல் கொடுத்தது.
அதோடு அமெரிக்க கடற்படையின் பி8 கண்காணிப்பு விமானம் இந்திய கப்பல் அருகே ரப்பர் படகு ஒன்றை வீசியது. எம்எஸ்வி விராட் 1 கப்பலில் இருந்த 14 மாலுமிகளும் அதன்மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த மீட்பு பணியை ஓமன் அதிகாரிகளும் இந்திய தூதரக அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டனர்.