

வாஷிங்டன்: “வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் சரியானதைச் செய்ய தவறினால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். அது நிகோலஸ் மதுரோ சந்திப்பதைவிட பெரிதாக இருக்கும்” என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அவரது நாட்டுக்கே சென்று நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்த அமெரிக்க பாதுகாப்புப் படை, அவர்கள் இருவரையும் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது. அவரது கைதுக்கு வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். வெனிசுலாவின் ஒரே அதிபர் நிகோலஸ் மதுரோதான் என்றும், அவரை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கடுமையான வார்த்தைகளில் கூறி இருந்தார்.
பின்னர், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்குமாறு துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ராட்ரிக்ஸுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார். ‘‘அவர் சரியானதைச் செய்யத் தவறினால், பெரிய விலையை அவர் கொடுக்க நேரிடும். நியூயார்க் சிறையில் இருக்கும் நிகோலஸ் மதுரோவைவிட அது பெரிய விலையாக இருக்கும்’’ என ட்ரம்ப் எச்சரித்தார்.
வெனிசுலாவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ‘‘அங்கு மறுகட்டமைப்பு செய்வது, ஆட்சி மாற்றம் செய்வது இப்படி நீங்கள் எதை வேண்டுமானாலும் அழைக்கலாம். அது இப்போது இருப்பதைவிட சிறந்ததாக இருக்கும். இதைவிட மோசமாக எதுவும் ஆகிவிடாது’’ என கூறினார்.
மேலும் அவர், ‘‘அமெரிக்காவின் தலையீட்டுக்கு உள்ளாகும் கடைசி நாடு வெனிசுலா எனச் சொல்ல மாட்டேன். டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் அந்த பெரிய தீவு (கிரீன்லாண்ட்) நிச்சயமாக எங்களுக்குத் தேவை. அந்த தீவை தற்போது ரஷ்ய மற்றம் சீன கப்பல்கள் சூழ்ந்துள்ளன’’ எனத் தெரிவித்தார்.
டொனால்டு ட்ரம்ப்பின் இந்தக் கண்டிப்பை அடுத்து பேசிய வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ், ‘அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் டெல்சி ராட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலாவில் இருந்து உலகுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு செய்தி: வெனிசுலா அமைதியாகவும் பிறரோடு இணக்கமாகவும் வாழ்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாமல், மரியாதை மற்றும் ஒத்துழைப்பு நிறைந்த சூழலில் வாழ எங்கள் நாடு விரும்புகிறது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அமைதியை உறுதி செய்வதன் மூலமே உலக அமைதி கட்டியெழுப்பப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடன் ஒத்துழைக்குமாறு அமெரிக்க அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களே, எங்கள் மக்களும் எங்கள் பிராந்தியமும் அமைதியையும் பேச்சுவார்த்தையையுமே விரும்புகிறோம்; போரை அல்ல. நிகோலஸ் மதுரோவின் செய்தியும் இதுதான். அதுவே இப்போது முழு வெனிசுலாவின் செய்தியாக உள்ளது. இதுவே நான் நம்பும் வெனிசுலா. இதற்காகவே நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். வெனிசுலாவுக்கு அமைதி, வளர்ச்சி, இறையாண்மை மற்றும் எதிர்காலத்துக்கான உரிமை உண்டு’’ என தெரிவித்துள்ளார்.