

புதுடெல்லி: உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. அதற்கு அடுத்து சவுதி அரேபியாவில் 15%, ஈரானில் 12%, கனடாவில் 10%, இராக்கில் 8.5%, குவைத்தில் 6%, ஐக்கிய அரபு அமீரகத்தில் 5.8%, ரஷ்யாவில் 4.7%, லிபியாவில் 2.9%, அமெரிக்காவில் 2.6% சதவீத எண்ணெய் வளம் இருக்கிறது.
கச்சா எண்ணெய் விற்பனை தொடர்பாக கடந்த 1970-ம் ஆண்டில் சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன்படி அமெரிக்க டாலரில் மட்டுமே கச்சா எண்ணெய் வணிகம் நடைபெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் உலகின் எண்ணெய் வணிகம் 100% அளவுக்கு அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்தது.
உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான எண்ணெய் வணிகத்தில் ரஷ்யாவின் ரூபிள், சீனாவின் யுவான் கரன்சி பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
உலக எண்ணெய் வளத்தில் முதலிடத்தில் இருக்கும் வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடிக்கிறது. இதன் எதிர்விளைவாக வெனிசுலாவின் எண்ணெய் வணிகத்தில் சீனா ஆழமாக கால் பதித்து உள்ளது. அந்த நாட்டில் இருந்து சுமார் 70 முதல் 90 சதவீத கச்சா எண்ணெயை சீனா இறக்குமதி செய்து வந்தது. இரு நாடுகள் இடையே யுவான் கரன்சியில் எண்ணெய் வணிகம் நடைபெற்றது.
இதன் காரணமாக உலக கச்சா எண்ணெய் வணிகத்தில் அமெரிக்க டாலரின் பங்கு 100-லிருந்து 80 சதவீதமாக குறைந்து உள்ளது. ரஷ்யாவின் ரூபிள், சீனாவின் யுவான், இந்திய ரூபாயில் சுமார் 20% எண்ணெய் வணிகம் நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் எண்ணெய் வணிகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து இதர நாடுகளின் கரன்சிகள் கோலோச்ச தொடங்கும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
இதை தடுக்க வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. இதன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அமெரிக்கா அடித்திருக்கிறது. வரும் காலத்தில் வெனிசுலாவின் ஒட்டுமொத்த எண்ணெய் வளமும் அமெரிக்காவின் வசமாகி டாலரின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதோடு சீனாவின் ஆதிக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
எண்ணெய் விலை குறையும்: அமெரிக்க பொருளாதார தடைகளால் வெனிசுலாவில் தற்போது 10% அளவுக்கே கச்சா எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வெனிசுலா முழுமையாக வரும் போது 100% எண்ணெய் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய நிறுவனத்துக்கு ரூ.9,000 கோடி கிடைக்கும்: ஒரு காலத்தில் வெனிசுலாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. தினமும் 4 லட்சம் பேரல்கள் வரை இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அமெரிக்க அரசு விதித்த பொருளாதார தடைகளால் கடந்த 2020-ம் ஆண்டில் வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டது.
இந்திய பொதுத்துறை நிறுவனமான ஒஎன்ஜிசி விதேஷ் லிமிடெட், வெனிசுலாவின் சான் கிறிஸ்டோபல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதற்காக வெனிசுலா அரசு நிறுவனமான பிடிவிஎஸ்ஏ, ஒஎன்ஜிசி-க்கு ரூ.9,000 கோடியை வழங்க வேண்டும். வெனிசுலாவின் பொருளாதார நெருக்கடியால் இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வெனிசுலா கொண்டு வரப்படுவதால் அந்த நாட்டில் கச்சா எண்ணெய் வணிகம் மீண்டும் எழுச்சி பெறும். இந்தியாவின் ஒஎன்ஜிசி-க்கு கிடைக்க வேண்டிய ரூ.9,000 கோடி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஒஎன்ஜிசி விதேஷ் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை வெனிசுலாவில் மீண்டும் கால் பதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.