

புளோரிடா: அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ரஷ்யாவும் நெருங்கியுள்ளன. இது சிக்கலானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டரை மணி நேரம் போனில் பேசினார்.
இரு தலைவர்களுடனும் பேசிய பின் ட்ரம்ப் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைனும், ரஷ்யாவும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் எப்போதும் இல்லாத அளவில் நெருங்கியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தினாலும், புதின் அமைதியை விரும்புகிறார்.
அமைதி ஒப்பந்தம் கடுமையானதாக இருக்கும். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன். ஜெலன்ஸ்கி தைரியமானவர். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் வலுவான பதிலடி கொடுக்கிறது. நான் அதிபர் புதினுடன் மீண்டும் பேசவுள்ளேன். இன்னும் சில வாரங்களில் முடிவு தெரியும்” என்றார்.
ட்ரம்பை சந்தித்த பின் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், ”அமைதி பேச்சுவார்த்தைக்கு அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் பணிக்கு நன்றி. அமைதிக்கு உக்ரைன் தயாராக உள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கான 20 அம்ச திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். இது தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களை ட்ரம்ப் சந்தித்து பேசவுள்ளார்” என்றார்.