

உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித உணவு’ குறித்த ஐ.நா. கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கையின்படி, உலக அளவில் 2025-ம் ஆண்டில் 64.50 கோடி மக்கள் இன்னும் பசியோடு வாழ்ந்துள்ளனர். ஆனால், 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1.40 கோடி குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 4.30 கோடி குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், இன்னும் உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பசியோடுதான் வாழ்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், பொருளாதாரப் பிரச்சினைகள், காலநிலை மாற்றம், போர் ஆகியவையாகும்.
முன்னேற்றம் எத்தகையது?
2025-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையில் 7.8% பேர் மட்டுமே பசியால் வாழ்கிறார்கள். இது 2024-ம் ஆண்டில் 8.1% ஆகவும், 2022-ம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்து, இந்த இரு ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது. பசியால் வாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 3-வது ஆண்டாகக் குறைந்துள்ளது. இருப்பினும், 2019-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது.
எந்த நாடுகளில் அதிகம்?
உலக அளவில் கடும் பசியால் வாடும் மக்கள் அதிகம் வாழ்வது ஆப்பிரிக்காவில்தான். 2025-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் மட்டும் 30.90 கோடி மக்கள் ஊட்டச்சத்து இல்லாமல் வாழ்கிறார்கள். உலகில் பசியோடு இருக்கும் மக்கள் எண்ணிக்கையில் பாதிக்கு அதிகமானோரும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் 5 பேரில் ஒருவர் பசியோடு இருக்கிறார் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆசியாவைப் பொறுத்தவரை, 29.20 கோடி மக்கள் பசியோடு வாழ்கிறார்கள். உலக அளவில் பசியோடு இருக்கும் மக்கள் எண்ணிக்கையில் 6% சதவீதம் மக்கள் ஆசியாவில் வாழ்கிறார்கள். லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் 3.20 கோடி பேரும், உலகளவில் 4.8% பேரும் பசியோடு வாழ்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சிகளால் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆசியாவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் 2024-ம் ஆண்டில் பசியோடு இருப்போர் எண்ணிக்கை 20.3% இருந்த நிலையில், 2025-ல் இது 20% ஆகக் குறைந்துவிட்டது.
அதேபோல ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும் மக்கள் எண்ணிக்கையும் உலகளவில் 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் குறையும் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் பசியோடு இருப்போர் எண்ணிக்கை 5.10 கோடி முதல் 5.20 கோடியாகக் இருக்கும். ஆப்பிரிக்காவில் 56% பேர் இருப்பார்கள்.
ஆரோக்கியமான உணவை யாரால் சாப்பிடமுடியவில்லை.
ஐ.நா.வின் அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் தினசரிக்கான ஆரோக்கியமான உணவைச் சாப்பிட முடியாதவர்கள் எண்ணிக்கை 29.70 கோடியாக இருந்த நிலையில் (உலக அளவில் 37.4%) 2025-ம் ஆண்டில் இது 26.90 கோடியாகக் குறைந்துவிட்டது (32.7%). இதன்மூலம் மக்களின் சராசரி வருவாய் அதிகரித்துள்ளது. அதேசமயம், ஆரோக்கியமான உணவின் விலை ஊதியம் உயர்ந்ததைவிட அதிகரித்துள்ளது.
ஆரோக்கியமான உணவுகளுக்காக செலவிடுவதற்காக மக்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. சத்துள்ள உணவுகளை வாங்கி உண்ணும் போக்கும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சத்துள்ள உணவுக்காக செலவிடும் தொகை தினசரி 4.28 டாலர் (ரூ.413) என்று 2025-ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. இது 2021-ம் ஆண்டில் ரூ.332 (3.44 டாலர்) ஆகவும், 2017-ம் ஆண்டில் (2.94 டாலர்) 283 ரூபாயாகவும் இருந்தது.
ஆரோக்கியமான உணவு என்றால் என்ன?
உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவை 6 உணவுக் குழுக்களில் இருந்து 11 வகை உணவுகளையும் சாப்பிட வேண்டும் எனவும், தினசரி ஒரு நபருக்கு 2,330 கலோரி உணவு தேவை எனப் பரிந்துரைத்துள்ளது.
ஆரோக்கியமான உணவு இல்லாமல் லத்தின் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் 17.20 கோடி மக்களும், ஐரோப்பா, வட அமெரிக்காவில் 7.75 கோடி மக்களும் வாழ்கிறார்கள். ஆப்பிரிக்காவில் 103 கோடி மக்களும், ஆசியாவில் 140 கோடி மக்களும், ஆசியா ஓசியானிக் நாடுகளில் 23 லட்சம் மக்களும் ஆரோக்கிய உணவு இல்லாமல் இருக்கிறார்கள்.
விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், ஆப்பிரிக்காவில் 67% பேரும், அதைத் தொடர்ந்து ஆசியாவில் 29%, லத்தீன் அமெரிக்கா, கரிபீயின் தீவுகளில் 26%, ஐரோப்பா, வட அமெரிக்காவில் 7%, ஆசியா ஓசியானிக்கில் 5% மக்களும் இருக்கிறார்கள்.
தினசரி எத்தனை கலோரி வேண்டும்?
அதன்படி, எண்ணெய் மற்றும் கொழுப்பு வகையில் தினசரி 300 கலோரி, மாவுச்சத்து உணவுகளில் 1,160 கலோரி, காய்கறிகளில் 110 கலோரி, இறைச்சி, முட்டை ஆகியவற்றில் 300 கலோரி, பழங்களில் இருந்து 160 கலோரி, பருப்புகள், விதைகளில் ஆகியவற்றில் இருந்து 300 கலோரியும் தினசரி ஒரு மனிதனுக்கு தேவை. தினசரி ஒரு நபருக்கு 2,330 கலோரி உணவு தேவை.
கொடூரமான பசியில்...
உலக அளவில் பசியோடு இருக்கும் மக்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. ஆனால், உலகின் தெற்கு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் உணவுப் பற்றாக்குறை, போர், பொருளாதார பாதிப்பு, காலநிலை மாற்றத்தால் பசியில் சிக்கியிருக்கிறார்கள்.
உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையின்படி, உலகளவில் 14 லட்சம் மக்கள் மிகவும் பேரழிவு தரக்கூடிய பசியால் வாழ்கிறார்கள். இதில் காசாவில் மட்டும் 6.40 லட்சம் மக்கள் கொடூமையான பசியில் வாழ்கிறார்கள். உலகளவில் பசியோடு இருப்பவர்களில் 32% மக்கள் இங்குதான் இருக்கிறார்கள்.
இஸ்ரேல் தொடுத்த இனப் போரால், அப்பாவி மக்களுக்கு உணவு அளிக்கவும் தடை செய்தது, மனித நேய உதவிகளையும் வழங்கவிடவில்லை. இதனால்தான் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் தடை செய்ததால் காசாவில் செயல்பட்டுவந்த ஏராளமான சமூக சமையல் கூடங்கள் மூடப்பட்டுவிட்டதால், இலவச உணவு கிடைக்காமலும், உணவு வாங்கக்கூட போதுமான வருமானம் இல்லாமல் காசா மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள்.
காசாவில் 6.37 லட்சம் மக்கள், கொடூரமான பட்டினோடு மக்கள் வாழ்கிறார்கள். முதலிடத்தில் சூடானில் 8.35 லட்சம் மக்கள் கொடூரப் பசியோடு வாழ்கிறார்கள், ஏமனில் 41,200 பேரும், ஹெய்த்தியில் 8,400 பேரும், மாலியில் 2,600 பேரும் பசியோடு வாழ்கிறார்கள். உலகளவில் 14 லட்சம் மக்கள் பசியால் வாழ்ந்து வருகிறார்கள். அதில் 32% பேர் காசாவில் மட்டும் இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சூடானில் ஒரு சதவீதம் பேரும், தெற்கு சூடானில் ஒரு சதவீதம், ஏமன், ஹெய்த்தில் 0.1% பேரும் உள்ளனர்.