Published : 24 May 2023 04:27 PM
Last Updated : 24 May 2023 04:27 PM

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சி: இந்திய வம்சாவளி இளைஞர் கைது

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமாகிய வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழையும் முயற்சியில் ஒருவர் டிரக்கை ஓட்டிவந்தார். அவரைத் தடுத்து விசாரித்தபோது அவர் இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் தற்போது மிசூரி மாகாணத்தில் வசித்து வருவதும் அவருடைய பெயர் சாய் வர்ஷித் என்பதும் தெரியவந்தது. அவர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தைச் செலுத்த முயன்றதால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது அந்த நபர் அதிபர் பைடனை கொலை செய்யப் போவதாகத் தெரிவித்தார். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது அதிபர், துணை அதிபரை கடத்திக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடைய ட்ரக்கில் எந்த ஆயுதமும், வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை.

சாய் வர்ஷின் இந்தத் தாக்குதலை ஆறு மாதங்களாக திட்டமிட்டு வந்திருக்கிறார். இதனை ஒரு குறிப்பேட்டில் அவர் எழுதிவைத்திருந்தார். வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டின் பொறுப்பில் அமர்வதே தனது குறிக்கோள் என்று அந்தக் குறிப்பில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்து இருப்பது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x