Published : 19 May 2023 04:52 PM
Last Updated : 19 May 2023 04:52 PM

“வேண்டாம்... விட்டுவிடுங்கள்...” - ஜி7 தலைவர்களுக்கு ஹிரோஷிமா சர்வைவர்கள் எச்சரிக்கை

டோக்கியோ: “நல்ல வெளிச்சமான ஆரஞ்சு நிறம்... அந்த ஆண்டின் முதல் சூரிய உதயம்போல் அந்த சம்பவம் நடந்தேறியது...” என்று அந்தக் கொடிய தாக்குதலை நினைவுகூர்கிறார் ஜப்பானின் சடே. தற்போது 90 வயதாகும் சடே, இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசி ஏற்படுத்திய வரலாற்றின் மோசமான போர்த் தாக்குதலின் சாட்சியாக நம் முன் நிற்கிறார்.

அது குறித்து சடே தொடர்ந்து விவரிக்கும்போது, “நான், என் பாட்டி வீட்டில் இருந்தேன். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது, நான் சுவற்றில் தூக்கி வீசப்பட்டேன். வீட்டிலிருந்த கண்ணாடிகள் உடைந்தன. என் தந்தையை சகோதரர் பலத்த காயத்துடன் தூக்கி வந்தார். என் தந்தைக்கு உடல் முழுவதும் தீக்காயம். குடிக்க தண்ணீர் கேட்ட என் தந்தைக்கு என்னால் தண்ணீர் வழங்க முடியாமல் போனதை நினைத்து இன்று வருத்தம் கொள்கிறேன். என் தந்தை சிகிச்சைப் பலனின்றி இரண்டு தினங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். என் தாயும் உயிரிழந்தார்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் சடே.

இந்த பெரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியவில்லை. ஹிரோஷிமாவில் 3 லட்சம் மக்கள்தொகை இருந்த நிலையில், அந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்கா வீசிய அணுகுண்டு வீச்சில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகாசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

இந்தத் துயர நினைவுகளைத் தாங்கிக்கொண்டு ஹிரோஷிமா விதிகளில் உலா வரும் மக்கள் இன்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பானின் ஹிரோஹிமாவுக்கு வந்த தலைவர்களை நோக்கி சத்தமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

”அணு ஆயுதப் போர் வேண்டாம்... உக்ரனை விட்டுவிடுங்கள்... சீனா மீது போர் வேண்டாம்” என்பன போன்ற பதாகைகளுடன் அம்மக்கள் எழுப்பும் குரல் ஹிரோஷிமாவில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தோஷிகோ பேசும்போது, “அணுகுண்டு வெடிப்பில் என் நண்பர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அணு ஆயுதங்கள் இந்த உலகுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்று அனைவரும் உணர வேண்டும். உலக நாடுகளின் தலைவர்கள் ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும். உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

முதல் நிகழ்வாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x