Published : 29 Oct 2017 11:52 AM
Last Updated : 29 Oct 2017 11:52 AM
ஸ்பெயினின் வடகிழக்கில் கேட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அதன் மக்கள் தொகை 75 லட்சம். ஸ்பெயின் பொருளாதாரத்தில் கேட்டலோனியாவின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. ஆனாலும் ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக தடையை மீறி நடந்த பொது வாக்கெடுப்பில் கேட்டலோனியா தனி நாடாக பிரிய 90 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். எனினும் இதை ஸ்பெயின் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், பார்சிலோனாவில் கேட்டலோனியா மாகாண நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. அப்போது ஸ்பெயினிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, கேட்டலோனியாவுக்கான தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்ததுடன் அந்த மாகாண அரசை கலைத்து ஸ்பெயின் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் கேட்டலோனியா தனது நேரடி கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கேட்டலோனியா தலைவரும் வடகிழக்கு பகுதி ஆலோசகருமான கார்லஸ் புய்க்டிமான்டை ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி நீக்கம் செய்துள்ளார். மேலும் அந்த மாகாண அரசின் 12 அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்துள்ளார். அரசின் உத்தரவை மதிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு ரஜோய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 21-ல் தேர்தல்
மேலும் கேட்டலோனியா நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT