Published : 18 Apr 2023 01:19 PM
Last Updated : 18 Apr 2023 01:19 PM

நியூசிலாந்து பைலட்டை சிறைப்பிடித்த இந்தோனேசிய கிளர்ச்சியாளர்கள்: மோதலில் 13 ராணுவ வீரர்கள் பலி

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான பைலட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியா கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு பப்புவாவில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியாவிடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த பிலிப் என்ற விமான பைலட்டை கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரியில் சிறைப்பிடித்தனர். பிலிப்பை கைது செய்து வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டனர். மேற்கு பப்புவாக்கு விடுதலை கிடைக்கும்வரை அயல் நாட்டை சேர்ந்த பைலைட்டுகளுக்கு இங்கு பணி செய்ய அனுமதி இல்லை என்று கிளர்ச்சியாளர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

பிலிப்பை மீட்க இந்தோனேசிய ராணுவம் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், யல், முகி மாவட்டங்களில் உள்ள இந்தோனேசிய ராணுவ தளவாடங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 13 ராணுவ வீரர்கள் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “ மேற்கு பப்புவாவில் உள்ள விடுதலை ராணுவத்திற்கும் இந்தோனேசிய ராணுவத்திற்கும் இடையிலான ஆயுத மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்லது.

மேலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தோனேசிய ராணுவத்திற்கு ஒத்துழைப்பை நிறுத்துமாறும் கிளர்ச்சியாளர்கள் குழு கேட்டுக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x