Published : 04 Mar 2023 02:39 PM
Last Updated : 04 Mar 2023 02:39 PM

பள்ளி மாணவிகளுக்கு விஷம் - “எதிரிகளின் சதி திட்டம்” என ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

இப்ராஹிம் ரெய்சி

தெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தை “எதிரிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விமர்சித்துள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் நஞ்சு இருந்தது தெரிந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித் துறை அமைச்சகமும் உறுதி செய்தது.

மாணவிகள் கல்வி பயில்வதை தடுப்பதற்காக, மத அடிப்படைவாதிகளால் விஷம் வைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம். இதன் மூலம் நமது எதிரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

அந்த எதிரிகள் யார் என்று அவர் கூறவில்லை. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத்தான் ஈரான் எப்போது குற்றம்சாட்டும். இதனால், இம்முறை மறைமுகமாக ரெய்சி பேசி இருக்கிறாரா என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, இளம்பெண் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் எழுந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவி பேசும்பொருளானது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x